சிவகங்கை: மலைவாழ் பெண்கள் மத்தியில் நிலவும் ஒழிக்கப்பட வேண்டிய சடங்கு குறித்து எடுக்கப்பட்ட குறும்படமான ‘சிதை’, தற்போது திரைப்படமாக தயாராகி வருகிறது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த ஜெ.ராமச்சந்திரன் என்பவரின் மகன் கார்த்திராம் (34). இவர் ‘துணிவு’ பட இயக்குநர் வினோத், கன்னட பட இயக்குநர் அய்யப்ப பி ஷர்மா ஆகியோரிடம் உதவி இயக்குநராக இருந்தவர். இவர் இயக்கிய ‘சிதை’ குறும்படம் 630 விருதுகளைப் பெற்றுள்ளது. திருமணமாகும் வரை பெண்கள் கன்னித்தன்மையோடு இருப்பதற்கு பழங்குடியினர் இடையே நிலவும் சடங்குகள் குறித்தும், பொது வெளியில் அவர்களால் கடைப்பிடிக்கப்படும் மருத்துவ சிகிச்சை முறைகள் குறித்தும் இந்த படம் பேசியது. சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடியதாக இப்படம் இருந்ததால், பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்களை இப்படம் பெற்றது. இந்நிலையில், இந்த குறும்படத்தை திரைப்படமாக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் இயக்குநர் கார்த்திராம். கொடைக்கானல் பகுதியில் 30 நாட்கள் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளார்.
இயக்குநர் பேட்டி: குறும்படம் திரைப்படமாவது குறித்து இயக்குநர் கார்த்திராம் கூறியதாவது: “பெண்கள் கன்னித்தன்மையோடு இருக்க பெண்களின் பிறப்புறுப்பில் செய்யப்படும் ‘காஃப்டா’ எனும் சடங்கு முறை இன்றும் ஆப்பிரிக்க நாடுகளில் நடந்து வருகிறது. 4 வயது பெண் குழந்தை முதல் தொடங்கும் சடங்கு முறை உலகம் முழுவதுமுள்ள பழங்குடியினரிடையே நிலவுகிறது. இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா மாநிலங்களிலும் பின்பற்றப் படுகிறது. மேலும், மருத்துவ ரீதியாகவும் இங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதற்காக பெண்களின் பிறப்புறுப்பில் மேற்கொள்ளும் ஆபத்தான, அதே நேரத்தில் சடங்குகள் என்ற போர்வையில் மேற்கொள்ளப்படும் முறையை கைவிடவேண்டும் என்ற நோக்கில் ‘சிதை’ என்ற தலைப்பில் குறும்படமாக எடுத்தேன்.
இந்த குறும்படம் இதுவரை 650க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளது. பாகிஸ்தானில் நடந்த பிலிம்பேர் விழாவில் பங்கேற்று விருது பெற்றதும், சென்னையில் நடந்த பிலிம்பேர் விருது நிகழ்ச்சியில் பங்கேற்று விருது வாங்கியதும் பெருமைக்குரியது. இதனைப் பார்த்த அன்கி புரொடெக்ஷன் நிறுவன தயாரிப்பாளர் தன்ராஜ், திரைப்படமாக தயாரிக்க முன்வந்தார். பழங்குடியினர் தொடர்பான கதைக்களம் என்பதால் கொடைக்கானல் மலையில் பள்ளங்கி என்ற கிராமத்தில் 30 நாட்கள் படப்பிடிப்பு நடத்தி முடித்துள்ளோம். இதில் புதுமுகங்களே நடிக்கின்றனர். கன்னித்தன்மைக்காக பெண்ணுறுப்பு வதை செய்யப்படுவதை தடை செய்யவேண்டும் என்ற விழிப்புணர்வை வணிக ரீதியிலான திரைப்படமாக எடுக்கிறோம். இதன் மூலம் சமூகத்தில் மாற்றம் ஏற்படும் என உறுதியாக நம்புகிறோம்.”