விஜயகாந்தின் `வீரம் விளைஞ்ச மண்ணு’ படத்தை இயக்கிய கஸ்தூரி ராஜா, கேப்டன் குறித்து தனது நினைவலைகளை இங்கே பகிர்கிறார்.
“நான் விசு சார்கிட்ட உதவி இயக்குநரா இருந்தப்பவே, விஜயகாந்த் சாரைத் தெரியும். விசு சாரோட ‘டௌரி கல்யாணம்’, ‘புதிய சகாப்தம்’னு ரெண்டு படங்கள் நடிச்சிருக்கறதால, அப்பவே விஜயகாந்த் சாரோட நெருங்கிய நட்பாகிட்டேன். ஞாபக சக்தி அதிகம் உள்ளவர். அவருக்கு கேப்டன்னு யார் பெயர் வச்சாங்களோ தெரியாது. ரொம்ப பொருத்தமா வச்சிருக்காங்க. அவருடைய செயல்களே கேப்டன் மாதிரிதான் இருக்கும். சட்டசபையில் கூட நாம பார்த்திருக்கோமே… ஆண்மை பொருந்திய தோற்றமா இருக்கும். எவ்வளவோ நாள்கள் வாழ்ந்திருக்க வேண்டியவர் அவர்.

நான் இயக்கிய ‘வீரம் விளைஞ்ச மண்ணு’ படப்பிடிப்பில் மறக்க முடியாத விஷயங்கள் எவ்வளவோ இருக்கு. அவருடைய தனிப்பட்ட குணங்களை இந்தப் படத்தின் மூலம்தான் தெரிஞ்சுக்கிட்டேன். வெளியூர் படப்பிடிப்பில் அவருக்கென தங்குறதுக்கு ரூம் போட்டுக் கொடுத்திருப்போம். ஆனா, அவர் அந்த ரூமில் தங்கியிருக்க மாட்டார். அவரோட ரூமில் லைட்மேன் படுத்துட்டிருப்பார். இவரோ அந்த லைட்மேன் ரூமில் தூங்கிட்டு இருப்பார்.
இன்னொரு சமயம், புரொடக்ஷன் பாய் அறையில் சரிசமமா உட்காந்து ‘மாப்ள, மச்சான்… பங்காளி’னு சொல்லிக்கிட்டு சீட்டு விளையாடிட்டு இருப்பார். அவ்ளோ எளிமையான மனிதர். இவர் தூங்குறப்பவும் கூட, புரொடக்ஷன் பாய்யின் கால் இவர் மேல கிடக்கும். இவரோட கை, லைட்மேன் மேல இருக்கும். இப்படி ஏழை, பணக்காரன் வித்தியாசமில்லாமல் இருப்பார். கடைசி வரை அவர் ஏழைபோலவே வாழ்ந்தார். பணக்கார வேஷம் அவர் போட்டதே இல்லை.

என் குடும்பத்தின் நலனிலும் அக்கறை கொண்டவர் அவர். என் இரண்டாவது மகள் கார்த்திகா தேவி, இன்னைக்குப் புகழ்பெற்ற கைனகாலஜிஸ்ட் மருத்துவர். அவர் இன்னைக்கு டாக்டர் ஆக இருப்பதற்கு கேப்டனும் ஒரு காரணம். நான் கிராமத்துல இருந்து சென்னை வரும் போது, என் குழந்தைகளை டாக்டருக்குப் படிக்க வைக்கணும்னு விரும்பினேன். அதைப் போல, கார்த்திகாவும் டாக்டருக்குப் படிக்க விரும்பினார்.
ஆனால், அவருக்கு மெடிக்கல் சீட் கிடைக்கல. ஒரு கட்டத்துல நானே மகளிடம், ‘நீ இன்ஜினியரிங் படி’னு சொல்லியிருக்கேன். அந்தச் சமயத்துல நான் ‘வீரம் விளைஞ்ச மண்ணு’ படத்தை இயக்கிட்டு இருந்தேன். அப்ப எங்க வீட்டு வழியா விஜயகாந்த் கார்ல போயிருக்கார். அவரோட டிரைவர், இங்கேதான் நம்ம பட டைரக்டர் கஸ்தூரி ராஜா வீடு இருக்குதுனு சொல்லியிருக்கார்.
உடனே விஜயகாந்த் சார், ‘காரை டைரக்டர் வீட்டுக்கு விடு’ன்னு சொன்னதோடு, விஜயகாந்த் சார், வீட்டுக்குள்ள வந்துட்டார். அப்ப என் மகள் மெடிக்கல் சீட் கிடைக்காத வருத்தத்தில் அழுதுட்டிருந்தாங்க. உடனே விஜயகாந்த் சார், ‘பொண்ணு ஏன் அழுறா’னு கேட்டதோடு, ‘சீட் வாங்கிடலாம்’ன்னு நம்பிக்கையும் கொடுத்தார். ராமச்சந்திர மெடிக்கல் காலேஜூக்கு எங்களை அழைச்சிட்டு போய், சீட்டுக்காக அவரும் எங்களோட சேர்ந்து அலைந்து திரிந்து வாங்கிக் கொடுத்தார். அவர் பணம், காசு எதுவும் கொடுக்கல. ஆனா அவர் பண்ணினது அதை விட பெரிய உதவி. அன்றைய காலகட்டத்தில் மெடிக்கல் சீட் என்பது பெரிய கனவு. அன்னிக்கு அவருக்கு இருந்த பிஸி காலகட்டத்திலும், அவர் ஒருநாள் முழுக்க எங்களோடு இருந்தது, எங்கள் வாழ்நாளில் மறந்திட முடியாத பெரிய உதவி. இன்னிக்கு கார்த்திகா தேவி பெரிய மருத்துவராகி, 500 ஆபரேஷன்களுக்கு மேல செய்திட்டார். மகளின் இந்த உயரத்திற்கு அவரும் காரணமாக இருந்திருக்கார்.
விஜயகாந்த் சாரோட இழப்பு பேரிழப்பு. இது பேச்சுக்காக சொல்ற இழப்பு இல்ல. நிஜமாகவே இதுதான் உண்மையான இழப்புன்னு உணர வச்சிட்டார் மனிதர்” என நெகிழ்கிறார் கஸ்தூரி ராஜா.