ஆளுநர் ஆர்.என்.ரவி உடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு – முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் என்னென்ன?

சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் சனிக்கிழமை ஆலோசனை நடத்தினர். தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் ஜனவரி மாதம் கூடவிருக்கிறது. இந்தக் கூட்டத்தில் ஆளுநர் உரையும் இடம்பெறவிருக்கிறது. அதன்படி, இதுதொடர்பாக ஆளுநரிடம் ஒப்புதல் பெறும் பொருட்டு ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்க நேரம் கேட்கப்பட்டது. மாலை நேரம் ஒதுக்கப்பட்டதை அடுத்து சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து முதல்வர் ஸ்டாலின் பேசினார். ராஜ்பவனில் ஆளுநரை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்திய அவருடன் அமைச்சர்கள் துரைமுருகன், ரகுபதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

சமீபத்தில் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நிலுவையில் வைத்துள்ளதாக சொல்லி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கின் தீர்ப்பில், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க ஆளுநர் ரவி தாமதப்படுத்தியது குறித்து கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்காக வந்த மசோதாக்களை திருப்பி அனுப்பிவிட்டு, மீண்டும் பேரவையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பிய மசோதாக்களை ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு அனுப்ப முடியாது என அரசியலமைப்பின் 200-வது பிரிவை சுட்டிக்காட்டினர். மேலும், ஆளுநர் ரவி, முதல்வர் ஸ்டாலினை நேரில் அழைத்து சுமுகமாக பேசி இதற்கு தீர்வு காண வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அந்த அடிப்படையில் நிலுவையில் உள்ள மசோதாக்கள் தொடர்பாக ஆளுநரும் முதல்வரும் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. ஏற்கெனவே கடந்த பத்து நாட்களுக்கு முன்பு இதே விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக முதல்வர் ஸ்டாலினுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், அப்போது தமிழகத்தில் மழை, வெள்ள பாதிப்புகள் இருந்ததால் அந்தப் பணிகளை பார்வையிடுவதற்காக அப்போது ஆலோசனை நடத்தவில்லை. இந்த நிலையில்தான் தற்போது இந்த சந்திப்பில் நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பபட்டது.

முன்வைக்கப்பட்ட கோரிகைகள் என்னென்ன? – ஆளுநர் மாளிகைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, “உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி ஆளுநரை அவரது மாளிகையில் சந்தித்து பேசினோம். 21 மசோதாக்கள் தமிழக அரசால் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஆளுநர் 20 மசோதாக்களை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளார். ஒரு மசோதா மட்டும் ஆளுநரிடம் நிலுவையில் உள்ளது.

முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் விஜயபாஸ்கர் மீது விசாரணை நடத்த அனுமதி கேட்டு அனுப்பப்பட்ட கோப்புகள் நிலுவையில் உள்ளன. அதற்கு அனுமதி தர கோரினோம். அத்துடன், முன்கூட்டி விடுதலை செய்வது தொடர்பாக 112 கோப்புகள் முதற்கட்டமாக ஆளுநருக்கு அனுப்பப்பட்டன. அதில் 68 பேரின் முன் விடுதலைக்கு அனுமதி அளித்து, 2 பேரின் விடுதலையை ரத்து செய்திருக்கிறார் ஆளுநர்.

இன்னும் 42 முன்விடுதலை கோப்புகள் ஆளுநரிடம் நிலுவையில் உள்ளன. இது தவிர, மேலும் 7 கோப்புகள் நீதிமன்றத்தில் உள்ளன. மொத்தமாக 49 முன்விடுதலை கோப்புகள் நிலுவையில் உள்ளன. 11 உறுப்பினர்கள் இருக்க வேண்டிய தமிழ்நாடு சர்வீஸ் கமிஷனில் 4 உறுப்பினர்கள் தான் இருக்கிறார்கள். அதற்கான ஒப்புதலையும் கேட்டுள்ளோம். இந்த கோரிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் ஆளுநரிடம் மனுவாக கொடுத்துள்ளார்.

முதல்வர் எல்லோருக்கும் மரியாதை கொடுக்ககூடியவர். ஆளுநரும் முதல்வர் மீது மரியாதை வைத்திருக்கிறார். இந்த இரண்டுமே இந்த சந்திப்பில் தெளிவாகத் தெரிந்தது. இந்த சந்திப்பு சுமுகமாக இருந்தது. விடை எப்படி வருகிறது என்பதை நீதிமன்றத்தில்தான் பார்க்க வேண்டும். சந்திப்பு சுமுகமாக அமைந்தது” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.