சென்னை, எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்தவர் கண்ணன் (17) (பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது). இவர் அங்குள்ள அரசுப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 26-ம் தேதி மாலை 6:30 மணியளவில் கடைக்குச் செல்வதாகக் கூறி வெளியில் சென்றவர், பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவரைக் காணாததால் அது தொடர்பாக கண்ணனின் குடும்பத்தினர் எம்.ஜி.ஆர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் எம்.ஜி.ஆர் ஜாகிர் உசேன் தெருவைச் சேர்ந்த டேவிட் (25) என்பவர்மீது போலீஸாரின் சந்தேகப் பார்வை விழுந்தது. அதனால் டேவிட்டைப் பிடித்து விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இது குறித்து போலீஸார் கூறுகையில், “பள்ளி மாணவன் கண்ணனை கடத்திய ஒரு கும்பல், அவரின் குடும்பத்தினரிடம் இரண்டு லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியிருக்கிறது. பணத்தை கொடுக்காத சூழலில் கண்ணன் கொலைசெய்யப்பட்டிருக்கிறார். இந்த வழக்கில் டேவிட்டைக் கைதுசெய்து விட்டோம். முக்கிய குற்றவாளியான சரவணன் என்ற ரௌடியைத் தேடி வருகிறோம்” என்றனர்.
போலீஸார் மாணவனைக் கடத்தி பணம் கேட்டு மிரட்டிய தகராறில் இந்தக் கொலை நடந்ததாககக் கூறினாலும், இந்தச் சம்பவத்தின் பின்னணியில் போதை மாத்திரை விற்பனை செய்யும் கும்பல் இருப்பதாக விவரம் தெரிந்தவர்கள் சொல்கிறார்கள்.