ஆமதாபாத் குஜராத் மாநிலத்தில் ஒரே நேரத்தில், 50,000க்கும் மேற்பட்டோர் சூரிய நமஸ்காரம் செய்து, கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளனர். அதற்கு, பிரதமர் மோடியும் பாராட்டு தெரிவித்து உள்ளார்.
குஜராத்தில் முதல்வர் பூபேஷ் படேல் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, புத்தாண்டை வரவேற்கும் விதமாக, நேற்று மாநிலம் முழுதும் 108 இடங்களில், சூரிய நமஸ்காரம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
பிரதமர் பாராட்டு
இதன் ஒரு பகுதியாக, மெஹ்சானா மாவட்டத்தின் மோதரா நகரில் உள்ள, பிரசித்தி பெற்ற சூரியனார் கோவில் வளாகத்திலும், இந்த நிகழ்ச்சி நடந்தது.
மாநிலம் முழுதும் நடைபெற்ற நிகழ்வில், மாணவர்கள், இளைஞர்கள், முதியோர் என 50,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, ஒரே நேரத்தில் சூரிய நமஸ்காரம் செய்து அசத்தினர். இந்த நிகழ்வு, கின்னஸ் உலக சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுஉள்ளது.
இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி, சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:
புத்தாண்டை சாதனையுடன் குஜராத் மாநிலம் துவக்கியுள்ளதை வரவேற்கிறேன். 108 இடங்களில், ஒரே நேரத்தில் சூரிய நமஸ்காரம் செய்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளனர். இதில், 108 என்ற எண், நம் கலாசாரத்தில் சிறப்பான மற்றும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
யோகா மற்றும் கலாசார பாரம்பரியம் மீதான நம் அர்ப்பணிப்புக்கு, இது ஓர் உண்மையான சான்றாகும். சூரிய நமஸ்காரத்தை அன்றாட வாழ்வில், ஓர் அங்கமாக மாற்றிக் கொள்ளுமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். அதனால், கிடைக்கும் நன்மைகள் ஏராளம்.
இவ்வாறு பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
உறுதிமொழி
இதேபோல, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், இச்சாதனையை பாராட்டியுள்ளார்.
அவர் தன் சமூக வலைதள பக்கத்தில், ‘நம் கலாசாரமே நம் பெருமை என்பதை வலியுறுத்தும் வகையில், குஜராத்தில் ஏராளமான ஆண்களும், பெண்களும் சூரிய நமஸ்காரம் நிகழ்ச்சியில் பங்கேற்று, கின்னஸ் உலக சாதனை படைத்து, 2024ம் ஆண்டை வரவேற்று உள்ளனர்.
‘எனவே, அனைவரும் யோகா பயிற்சி செய்து ஆரோக்கியமாக வாழ உறுதிமொழி ஏற்க வேண்டும்’ என, தெரிவித்துஉள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்