ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான டேவிட் வார்னர் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அதன் அடிப்படையில் சிட்னியில் நடைபெறும் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியுடன் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவிருக்கிறார்.
தற்போது ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. மூன்று போட்டிகள் கொண்ட இந்தத் தொடரின் கடைசி போட்டி நாளை (ஜனவரி 3, 2024) சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியே வார்னர் பங்கேற்று விளையாடும் கடைசி டெஸ்ட் போட்டி. இந்தத் தொடரின் முதல் போட்டி பெர்த்திலும் இரண்டாவது போட்டி மெல்போர்னிலில் நடைபெற்றன.

நாளை நடைபெற இருக்கும் போட்டிக்காக மெல்பேர்னிலிருந்து வார்னர் சிட்னி சென்றிருக்கிறார். அப்போது அவரது லக்கேஜில் இருந்த ஆஸி., அணியின் பச்சை நிற தொப்பி காணாமல் போயிருக்கிறது. ஆஸ்திரேலிய வீரர்கள் தங்களின் அந்தப் பச்சை நிற தொப்பியைப் பெரும் கௌரவமாக நினைக்கக்கூடியவர்கள். எனவே, தற்போது அந்தத் தொப்பியை யார் எடுத்திருந்தாலும் திருப்பித் தருமாறு டேவிட் வார்னர் வருத்தத்துடன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார்.
அவரது பதிவில், “அனைவருக்கும் வணக்கம். எனக்கு வேறு வழியில்லாததால் கடைசி முயற்சியாக இந்த வீடியோவைப் பதிவு செய்கிறேன். எனது லக்கேஜிலிருந்து பச்சை நிற தொப்பி காணாமல் போயிருக்கிறது. சில தினங்களுக்கு முன்பே மெல்பேர்ன் குவான்டாஸ் விமான நிலையத்திலிருந்து சிட்னிக்கு எனது லக்கேஜ் எடுத்துச் செல்லப்பட்டது. கேமராவில் செக் செய்து பார்த்தபோது சரியான தகவல் ஏதும் கிடைக்கவில்லை.
யாராவது அதனை எடுத்திருந்தால் கொடுத்து விடுங்கள். நான் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டேன். என்னிடம் மற்றொரு பேக் இருக்கிறது, அதனை உங்களுக்குப் பரிசாகத் தருகிறேன். என்னுடைய தொப்பியை மட்டும் கொடுத்து விடுங்கள்” என்று தெரிவித்திருக்கிறார்.
வார்னரின் தொப்பி இதற்கு முன்னரும் 2017-ல் ஒருமுறை தொலைந்து போயிருக்கிறது. அப்போது அதை அவரின் மனைவி கண்டுபிடித்தார். தற்போது தொலைந்திருக்கும் இந்தத் தொப்பியைத்தான் தன்னுடைய கரியரின் (111 டெஸ்ட் போட்டிகள்) பெரும்பாலான போட்டிகளில் அவர் அணிந்து விளையாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.