இந்தியாவால் தேடப்படும் `மோஸ்ட் வாண்டட் தீவிரவாதி’ மசூத் அசார் இறந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் பதிவுகள் வலம் வருகின்றன. பாகிஸ்தான் நாட்டவரான மசூத் அசார், ஜெய்ஷ்-இ-முகமது எனும் தடைசெய்யப்பட்ட தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர். இவர், 1994-ல் சட்டவிரோதமாகக் காஷ்மீருக்குள் நுழைந்தபோது இந்திய ராணுவ படையினர் கைதுசெய்தனர்.

அடுத்த நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு 1999-ல், அவரின் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள், நேபாளத்திலிருந்து டெல்லி நோக்கி பயணிகளை ஏற்றிவந்த இந்திய விமானத்தை, ஆப்கானிஸ்தானிலுள்ள கந்தஹாருக்கு கடத்திச் சென்றனர். அதன் பின்னர், மசூத் அசாரை விடுவித்தல்தான், பயணிகளை விடுவிப்போம் எனத் தீவிரவாத குழுவினர் பேரம் பேச, வேறு வழியின்றி மசூத் அசாரை இந்தியா விடுவித்தது. அதன்பின்னர், இந்தியாவில் 2001-ல் நாடாளுமன்றத்தின்மீது நிகழ்த்தப்பட்ட தீவிரவாத தாக்குதல், 2008-ல் மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதல், 2019-ல் ஜம்மு காஷ்மீரில் நடத்த புல்வாமா தீவிரவாத தாக்குதல் மசூத் அசாரின் பங்கு இருப்பதாகக் கூறப்படுகிறது.
இத்தகைய சூழலில், இந்தியாவால் தேடப்படும் முக்கிய தீவிரவாதி மசூத் அசார், பாகிஸ்தானில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்துவிட்டதாகச் சமுக வலைதளங்களில் அதிகாரபூர்வமற்ற செய்திகள் பரவி வருகின்றன.
BIG BREAKING NEWS – As per unconfirmed reports, Most wanted terrorist, Kandhar hijacker Masood Azhar, has been kiIIIed in a bomb expIosion by at 5 am. pic.twitter.com/NCsntm0XTP
— Oxomiya Jiyori (@SouleFacts) January 1, 2024
அதில், ஒருவர் தனது X சமூக வலைதளப் பக்கத்தில், “பிரேக்கிங் நியூஸ் – உறுதிப்படுத்தப்படாத தகவல்களின்படி, மிகவும் தேடப்படும் தீவிரவாதி, கந்தஹார் விமான கடத்தல்காரர் மசூத் அசார், அதிகாலை (ஜனவரி 1, 2024) ஐந்து மணியளவில், அடையாளம் தெரியாத நபரால், வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார்” எனக் குறிப்பிட்டு அவரின் புகைப்படத்தையும், வீடியோ ஒன்றையும் பதிவிட்டிருக்கிறார். இருப்பினும், இதை உறுதிப்படுத்தும் வகையிலோ அல்லது மறுக்கும் வகையிலோ எந்தவொரு செய்தியும் வரவில்லை.