ஹமாஸ் மீதான அச்சம்… துப்பாக்கியுடன் நேரலையில் தோன்றிய இஸ்ரேல் செய்தி தொகுப்பாளினி

டெல் அவிவ்:

ஹமாஸ் அமைப்பினர் கடந்த அக்டோபர் 7ம் தேதி திடீரென இஸ்ரேல் பகுதிக்குள் நுழைந்து அதிரடி தாக்குதலில் ஈடுபட்டனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை கொன்று குவித்ததுடன் அங்கிருந்து சுமார் 250 பேரை பிணைக்கைதிகளாக பிடித்து காசா பகுதிக்குள் கொண்டு வந்தனர். இந்த தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் ராணுவம், காசா மீது முழு அளவிலான தாக்குதலை நடத்தி வருகிறது. இதில் ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

இடையில் போர்நிறுத்த காலத்தில் பாதிக்கும் மேற்பட்ட பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். இன்னும் 100க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகள் ஹமாஸ் அமைப்பின் பிடியில் உள்ளனர். அவர்களை மீட்கவும், ஹமாஸ் அமைப்பினரை ஒழித்துக்கட்டவும் இஸ்ரேல் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது.

இவ்வாறு சண்டை நீடித்து வரும் நிலையில், இஸ்ரேல் பகுதிக்குள் ஹமாஸ் அமைப்பினர் மீண்டும் நுழைந்து தாக்குதலை நடத்தலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் இஸ்ரேலில் உள்ள பெண்கள் பலர் தங்களை தற்காத்துக் கொள்வதற்காக ஆயுதங்களை வைக்கத் தொடங்கியிருக்கிறார்கள். வேலை செய்யும் இடங்களுக்கும் ஆயுதத்தை எடுத்துச் செல்கிறார்கள். அவர்களில் இஸ்ரேல் செய்தி தொலைக்காட்சியில் பணிபுரியும் தொகுப்பாளினி லிட்டல் ஷேமேஷும் ஒருவர். அவர், கடந்த செவ்வாய்க்கிழமை நேரலை ஒளிபரப்பில் தோன்றியபோது, இடுப்பில் உள்ள மைக்ரோபோனுக்குப் பக்கத்தில் துப்பாக்கியை பேண்ட்டிற்குள் மாட்டியிருந்தார். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.