வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: அமெரிக்காவின் லாஸ் வேகாசில் கிளார்க் கவுண்டி மாவட்ட நீதிபதியை நீதிமன்ற அறையில் வைத்தே குற்றவாளி தாக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. தண்டனை அறிவித்த உடன் ஆத்திரத்தில் நீதிபதி மீது பாய்ந்து குற்றவாளி தாக்கியுள்ளார்.
அமெரிக்காவில் லாஸ் வேகாஸ் நகரில் தாக்குதல் வழக்கில் கைதானவர் டியோப்ரா ரெட்டன் (30). தாக்குதலால் பாதிக்கப்பட்டவருக்கு கடுமையான உடல் சீர்கேடு உருவானதாலும், இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நிவேடா நகர நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன.
விசாரணை நிறைவுற்ற நிலையில், நீதிபதி மேரி கே ஹால்தஸ் என்ற 62 வயதான பெண் நீதிபதி தீர்ப்பு வழங்கினார். ரெட்டன் தன் குற்றத்தை ஒப்பு கொண்டதால் அவருக்கு சிறை தண்டனை வழங்கும் தனது தீர்ப்பை நீதிபதி படித்து கொண்டிருந்தார். முன்னதாக, குற்றவாளி தரப்பில், பிணையில் விடுவிக்குமாறு கோரிக்கை எழுப்பிய போது, அதனை நீதிபதி மேரி மறுத்தார்.
பாய்ந்த குற்றவாளி
கடுமையாக கோபத்தில் இருந்த குற்றவாளி ரெட்டன், நீதிபதி அமர்ந்திருக்கும் இருக்கைக்கு முன் உள்ள மேசை மீது ஏறி குதித்து நீதிபதியை தாக்கினார். நீதிபதி மேரிக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. நீதிபதிக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. குற்றவாளி ரெட்டன் மீது நீதிபதியை தாக்குதல் நடத்தியதற்கு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் முழுவதும் நீதிமன்ற கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. குற்றவாளி நீதிபதியை தாக்கும் வீடியோ காட்சிகள் சமுகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இது தொடர்பாக வெளியான வீடியோ காட்சியில், குற்றவாளி நீதிபதி மீது தண்டனை அறிவித்த போது ஆத்திரத்தில் பாய்ந்து தாக்குகிறார். மேசையில் இருந்த கொடி சின்னங்கள் கீழே விழுந்தன. இதையடுத்து அங்குள்ளவர்களில் 3 பேர் குற்றவாளி ரெட்டனை மடக்கி பிடித்தனர். நீதிமன்றத்திலேயே ஒரு பெண் நீதிபதி மீது நடைபெற்ற தாக்குதல் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement