`அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்படுவாரா?’ – அரசியல் கணக்குதான் என்ன?

ஊழல் புகார்:

ஊழலுக்கு எதிரான அரசினை அமைப்பேன் என்ற சபதத்துடன் ஆம் ஆத்மி என்ற தனிக் கட்சியைத் தொடங்கி டெல்லியில் ஆட்சியைப் பிடித்தவர் அரவிந்த் கெஜ்ரிவால். ஆட்சி அமைத்த முதல் முறை ஆட்சிப் பொறுப்பிலிருந்து விலகினாலும். அடுத்த முறையில் பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் டெல்லியில் ஆட்சியைப் பிடித்தவர் அவர். டெல்லியைத் தாண்டி, கடந்த முறை பஞ்சாபில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றி பஞ்சாபிலும் ஆட்சியைப் பிடித்தது ஆம் ஆத்மி கட்சி.

அரவிந்த் கெஜ்ரிவால்

இந்நிலையில் தான் ஊழலுக்கு எதிராகத் தொடங்கப்பட்ட கட்சி மீதே ஊழல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. கடந்த 2021-2022-ம் ஆண்டு நிதியாண்டில் புதுடெல்லியில் மதுபான விற்பனை தொடர்பான கொள்கை திருத்தும் கொண்டுவரப்பட்டது. சில்லறை மது விற்பனை நிலையங்களுக்கு மது விற்பனை செய்ய உரிமம் வழங்கப்பட்டது. இந்த உரிமம் வழங்கப்பட்டதில் முறைகேடு நடந்ததாகவும், 100 கோடி ரூபாய் சட்ட விரோதமாக கைமாறியதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, டெல்லி துணை முதலமைச்சராக இருந்த மணீஷ் சிசோடியாவுக்கு சொந்தமான 21 இடங்களில் சிபிஐ சோதனையும் நடைபெற்றது.

துணை முதல்வர் கைது:

பின் இந்த மோசடி குற்றச்சாட்டு குறித்த அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது. இந்த விவகாரத்தில் மணீஷ் சிசோடியா அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். உடல்நலக்குறைவு ஏற்பட்ட போதிலும் தற்போது வரை மணீஷ் சிசோடியா சிறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த குற்றச்சாட்டுத் தொடர்பான விசாரணையில் 338 கோடி ரூபாய் பணம் கைமாறியதற்கு ஆதாரம் இருப்பதாக அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் தெரிவித்தது. மேலும் மணீஷ் சிசோடியாவை வெளியே விட்டால் அவர் சாட்சிகளை அழிக்கக்கூடும் என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.

மணீஷ் சிசோடியா

இந்த நிலையில் தான் மதுபான கொள்கை உருவாக்கியதில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதுதொடர்பாக, கடந்த நவம்பர் 2-ம் தேதி முதல்முறையாக குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த டெல்லி முதல்வரை ஆஜராகும்படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அந்த சமயத்தில் மத்தியப் பிரதேச மாநிலம் சிங்ராலியில் பேரணி ஒன்றில் கலந்துகொண்டதால் அவர் அந்த சமயத்தில் விசாரணைக்கு ஆஜர் ஆகவில்லை.

சம்மன் அனுப்பிய ஈ.டி… ஆஜராகாத கெஜ்ரிவால்:

இரண்டாவது முறையாகக் கடந்த டிசம்பர் மாதம் 21-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அந்த முறையும் அவர் ஆஜராகவில்லை. மூன்றாவது முறையாக இந்த ஆண்டு ஜனவரி 3-ம் தேதி ஆஜராகச் சம்மன் அனுப்பப்பட்டது. அந்த சம்மனில் விசாரணைக்கு ஆஜராகவேண்டும். இல்லையென்றால் ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து தன்னால் விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை என்று சொல்லி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறைக்குக் கடிதம் எழுதியிருந்தார்.

அமலாக்கத்துறை

மேலும், அந்த கடிதத்தில், ‘தான் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாகவும். அமலாக்கத்துறை சம்மன் தன்னை கைது செய்யும் நோக்கத்துடன் இருப்பதாகவும்’ குறிப்பிட்டிருந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த சூழலில் நேற்று (04.01.2024) டெல்லி முதல்வர் இல்லத்தைச் சுற்றிப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இன்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் பரபரப்பான தகவல்கள் வெளியாகின. இருந்தபோதிலும், நான்காவது முறையாகச் சம்மன் அனுப்பத் தயாராகுவதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

`நேர்மைதான் என் சொத்து’

அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்படுவார் என்ற பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார். அதில், “எந்த ஊழலும் நடக்கவில்லை என்பதே உண்மை. மதுபான கொள்கை முறைகேடு புகார் தொடர்பாக இதுவரை தனக்கு எதிராக எந்த ஆதாரத்தையும் அமலாக்கத்துறை காட்டவில்லை. எனக்கு அனுப்பப்படும் சம்மன்கள் சட்ட விரோதமானது என்று வழக்கறிஞர்கள் கூறுகிறார்கள். சட்டப்பூர்வமாக இருந்தால் நான் முழு ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருக்கிறேன். ஆம் ஆத்மி தலைவர்கள் பலர் இது தொடர்பாகப் பொய்யாகச் சிக்கவைக்கப்பட்டிருக்கின்றனர். மேலும், அவர்கள் தங்களுக்கெதிராக எந்த ஆதாரமும் இல்லாத நிலையில் சிறையில் வாடுகின்றனர்.

பாஜக என்னைக் கைதுசெய்ய நினைக்கிறது. போலியான குற்றச்சாட்டு மூலம் என்மீது அவதூறு பரப்ப நினைக்கிறார்கள். என்னுடைய மிகப்பெரிய பெரிய சொத்து என் நேர்மைதான். பாஜகவின் நோக்கம் என்னிடம் விசாரணை நடத்துவது இல்லை. வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு என்னைப் பிரசாரம் செய்யவிடாமல் தடுக்க நினைக்கிறார்கள். இல்லையென்றால் தேர்தல் வரும் சமயத்தில் அமலாக்கத்துறை எனக்குச் சம்மன் அனுப்பியது ஏன்… பாஜகவில் ஊழல் செய்பவர்களை எந்த மத்திய விசாரணை அமைப்புகளும் கண்டுகொள்வதில்லை. விசாரணை என்ற பெயரில் என்னை அழைத்து கைது செய்யத் திட்டமிடுகிறார்கள். எந்த தவறையும் நாங்கள் செய்யவில்லை. பாஜகவில் சேராதவர்களுக்குப் பாதுகாப்பு இல்லை” என்று பேசியிருந்தார்.

`கைது நடவடிக்கையைக் கையிலெடுக்க மாட்டார்கள்’

இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் எங்கள் தலைவரை பணிசெய்யவிடாமல் தடுப்பதற்காகவே மத்திய பாஜக அரசு அமலாக்கத்துறையை வைத்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறது என்று ஆம் ஆத்மியை சேர்ந்த மூத்த தலைவர்கள் குற்றச்சாட்டை முன்வைக்கிறார்கள். அதேநேரத்தில், “மதுபான கொள்கை ஊழலில் டெல்லி முதல்வருக்கும் தொடர்பு இருக்கிறது. எங்கு தான் கைதாகிவிடுவேனோ என்ற அச்சத்தில் பயந்து நடுங்குகிறார். அதனால்தான் அவர் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகாமல் தொடர்ந்து காரணம் சொல்லிக்கொண்டிருக்கிறார்”என்று பாஜகவின் செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியா சொல்லியிருக்கிறார்.

அரவிந்த் கெஜ்ரிவால்

இதுகுறித்து அரசியல் விமர்சகர்களிடம் பேசும்போது, “பாஜக அரசு வருமானவரித்துறை, அமலாக்கத்துறையைக் கையில் வைத்துக்கொண்டு எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கை மேற்கொள்கிறது என்ற பேச்சு நாடளவில் பெரிதாகப் பேசப்படுகிறது. அரவிந்த் கெஜ்ரிவால் தற்போதுவரை எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கிறார். இந்த சமயத்தில், அவரை கைது செய்தால் அது பாஜகவுக்கு பெரும் தலைவலியாக அமையும். கைது நடவடிக்கை கூட்டணியை இன்னும் வலுப்படுத்தும். ஊழல் குற்றச்சாட்டு என்றாலும்கூட, கைது நடவடிக்கை எதிர்க்கட்சிகளுக்கே பெரும் சாதகமாக அமையும். இந்தியா கூட்டணியை வலுவிழக்கத் தேவையான அனைத்தையும் செய்துவரும் பாஜக கண்டிப்பாக தற்போது கைது நடவடிக்கையைக் கையிலெடுக்காது. அதே நேரம், தொடர்ந்து சம்மன்களை அனுப்பி, விசாரணைக்கு கூட ஆஜராக நபர் என்ற இமேஜை அவர்மீது கட்டமைக்க முயற்சி செய்வார்கள். தற்போது கூட 4 -வது சம்மனை அனுப்பும் பணியில் அமலாக்கத்துறையினர் ஈடுப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது” என்றார்கள் விரிவாக.

அமலாக்கத்துறையின் நெருக்கடி அதிகரித்துள்ள நிலையில், கெஜ்ரிவால் இன்று குஜராத் செல்கிறார். அங்கு அவர் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.