சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில் வசித்து வருபவர் பட்டாபிராமன் (66). இவருக்கு மதுரையைச் சேர்ந்த மாறன் என்பவர் சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமாகியிருக்கிறார். அப்போது பட்டாபிராமின் மகன்களுக்கு தனியார் வங்கியில் உதவி மேலாளர் வேலை வாங்கித் தருவதாகக் கூறிய மாறன், அதற்காக ரொக்கமாகவும் வங்கி மூலமாகவும் சுமார் இரண்டு கோடி ரூபாய் வரை பெற்றதாகக் கூறப்படுகிறது. ஆனால் மாறன் வாக்குறுதி அளித்ததுபோல வங்கியில் வேலை வாங்கிக் கொடுக்கவில்லை. அதனால் பட்டாபிராமன், பணத்தை திரும்ப கேட்டிருக்கிறார். ஆனால் பணத்தையும் மாறன் திரும்ப கொடுக்காமல் தலைமறைவாகிவிட்டார்.

இதையடுத்து பட்டாபிராமன், சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகாரளித்தார். அதன்பேரில் வேலைவாய்ப்பு மோசடி புலனாய்வு பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து மாறனை தேடி வந்தனர். போலீஸாரின் தீவிர தேடுதல் வேட்டையில் மாறன், தலைமறைவாக இருந்த இடம் குறித்த ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்குச் சென்ற போலீஸார், மாறனைக் கைது செய்து சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில் கடந்த 2016-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பட்டாபிராமினிடமிருந்து பணத்தை மாறன் பெற்றது தெரியவந்தது. மேலும் கைது செய்யப்பட்ட மாறன், தனியார் கல்லூரிகளில் பேராசிரியராக வேலைப்பார்த்து வந்திருப்பதும் விசாரணையில் தெரிந்தது. விசாரணைக்குப்பிறகு மாறனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார் சிறையில் அடைத்தனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.