பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணம் குறித்த மாலத்தீவு அமைச்சரின் ட்வீட்டால் சர்ச்சை

புதுடெல்லி: பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணம் தொடர்பான மாலத்தீவு அமைச்சரின் ட்வீட் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக கடந்த 2-ம் தேதி லட்சத்தீவு சென்றிருந்தார். சுற்றுலாவை மேம்படுத்தும் நடவடிக்கையின் ஒருபகுதியாக இது கருதப்பட்டது. தன்னுடைய பயணம் குறித்த அனுபவத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருந்த மோடி, “லட்சத்தீவு என்பது வெறும் தீவுகளின் கூட்டமல்ல. காலம் காலமாக நீடித்து வரும் பாரம்பரிய மரபு மற்றும் மக்களுக்கான சான்று அது. கற்பதற்கும் வளர்வதற்குமான வாய்ப்புள்ளதாக எனது பயணம் அமைந்தது.

லட்சத்தீவுகளின் பிரமிக்க வைக்கும் அழகையும், அங்கு வாழும் மக்களின் நம்ப முடியாத அரவணைப்பையும் கண்டு நான் இன்னமும் பிரமிப்பில் இருக்கிறேன். அகத்தி, பங்காராம், கரவட்டி ஆகிய இடங்களில் மக்களோடு உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களின் விருந்தோம்பலுக்காக நன்றி கூறுகிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.

பிரதமரின் இந்தப் பயணம் குறித்து கருத்து தெரிவித்திருந்த மாலத்தீவு அமைச்சர் அப்துல்லா மஹ்சூம் மஜித் தனது சமூகவலைதளப் பக்கத்தில், இந்தியா மாலத்தீவை குறிவைக்கிறது என்றும், மாலத்தீவு கடற்கரை சுற்றுலாத்தலத்துடன் போட்டியிடுவதில் இந்தியா பல்வேறு சவால்களை எதிர்கொள்கிறது என்றும் குற்றம்சாட்டியிருந்தார். இது நெட்டிசன்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி நிலையில், பலரும் மாலத்தீவுக்கு மாற்றான சுற்றுலாத்தலமாக லட்சத்தீவை முன்வைத்தனர். பலர் தங்களின் மாலத்தீவு பயணத்தையும் ரத்து செய்தனர்.

உறவில் விரிசல்: மாலத்தீவு அதிபராக முகமது முய்சு ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு கடந்த சில மாதங்களாக இந்தியாவுக்கும் – மாலத்தீவுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. கடந்த நவம்பர் 2023-ம் ஆண்டு அதிபராக பதவியேற்றார். அவர் தனது தேர்தல் வாக்குறுதியில், “மாலத்தீவில் வெளிநாட்டு ராணுவம் இருக்ககூடாது. இந்திய ராணுவக்குழுவை இம்மண்ணியிலிருந்து வெளியேற்றுவேன்” எனக் கூறியிருந்தார். இது இந்தியாவுடனான உறவில் விரிசல் ஏற்பட தொடக்கமாக அமைந்தது. சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் அழைப்பை ஏற்று சீனா திங்கள் கிழமை சீனா செல்கிறார் முய்சு. அவர் அடிப்படையில் சீன ஆதரவு நிலைபாடு கொண்டவர்.

2023 டிசம்பரில் COP28 காலநிலைப் பேச்சுவார்த்தையின்போது துபாயில் பிரதமர் மோடியை முய்சு சந்தித்தார். இருதரப்பு உறவுகளையும் மேம்படுத்துவது குறித்து விவாதிக்க ஒரு முக்கிய குழுவை அமைக்க இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.மாலத்தீவில் இருந்து 77 இந்திய ராணுவ வீரர்களை திரும்பப் பெறுமாறு முய்சு இந்தியாவை கேட்டுக்கொண்ட பிறகும், இரு நாடுகளுக்கும் இடையிலான 100 க்கும் மேற்பட்ட இருதரப்பு ஒப்பந்தங்களை மறுபரிசீலனை செய்ய முடிவு செய்யபட்டது.

இதனால் இந்தியா – மாலத்தீவு இடையிலான உறவு அவ்வளவு சுமுகமாக இல்லை. இதன் வெளிப்பாடாக மாலத்தீவு அமைச்சரின் கருத்து பார்க்கப்படுகிறது. இந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்தியாவின் முக்கிய கடல்சார் அண்டை நாடாக மாலத்தீவு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.