
மலையாள இயக்குனர் படத்தில் சவுந்தரராஜா
நாயகன், குணச்சித்திரம், வில்லன் என பல தரப்பட்ட கேரக்டர்களில் நடித்து வந்த சவுந்தரராஜா தற்போது பிரபல மலையாள இயக்குனர் அனில் இயக்கத்தில் 'சாயாவனம்' என்ற படத்தில் நடித்திருக்கிறார். இயக்குனர் அனில், மோகன்லால் நடித்த 5 படங்கள் உள்பட 30க்கும் மேற்பட்ட மலையாளப் படங்களை இயக்கியவர் தற்போது தமிழில் 'சாயவானம்' படத்தை இயக்கி உள்ளார். எப்போதும் மழை பெய்யும் சிரபுஞ்சியில் வசிக்கும் படத்தின் நாயகிக்கு திருமணமாகிறது. முதல் நாள் இரவே கணவனை காணவில்லை. அவனை தேடி அவள் பயணிப்பதுதான் படத்தின் கதை. இதில் நாயகியின் கணவனாக சவுந்தரராஜா நடித்துள்ளார்.
இந்த படம் கோல்கட்டா சர்வதேச திரைப்பட விழா மற்றும் சென்னை சர்வதேச திரைப்பட விழா உள்ளிட்ட முக்கிய திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுகளை பெற்றுள்ளது. தாமோர் சினிமா பேனரில் சந்தோஷ் தாமோதரன் தயாரிக்கும் இத்திரைப்படத்தில் சவுந்தரராஜா, அறிமுக நாயகி தேவானந்தா, அப்புக்குட்டி, 'கர்ணன்' புகழ் ஜானகி, சந்தோஷ் தாமோதரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
சவுந்தரராஜா கூறும்போது “முழுக்க முழுக்க மலை, மழை மற்றும் காடுகளின் பின்னணியில் படமாக்கப்பட்டுள்ள 'சாயாவனம்' திரைப்படத்தில் இதுவரை ஏற்றிராத சவாலான பாத்திரத்தில் நடித்துள்ளேன். பெரும்பாலான காட்சிகள் சிரபுஞ்சியில் படமாக்கப்பட்டன. இடைவிடாது மழை பெய்யும் மலைப்பகுதியில் ஒரு பெண் எதிர்கொள்ளும் சவால்கள்தான் படத்தின் மையக்கரு. மிகுந்த சிரமங்களுக்கு இடையே படப்பிடிப்பு நடைபெற்றது. நான் நடித்துள்ள பாத்திரத்திற்காக நிறைய ஹோம் ஒர்க் செய்ய வேண்டி இருந்தது. சர்வதேச திரைப்பட விழாக்களில் எங்கள் கடின உழைப்பு பாராட்டப்படுவது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது” என்றார்.