ரீல்ஸ்சை ரியலாக மாற்றிய மனைவி: கணவருக்கு நேர்ந்த கொடூரம்

பாட்னா,

பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டம் நர்ஹான் கிராமத்தைச் சேர்ந்தவர் மகேஷ்வர் குமார். இவர் கொல்கத்தாவில் கூலி வேலை செய்து வந்தார். இவரது மனைவி ராணி குமாரி. இவர்களுக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 5 வயதில் மகன் உள்ளார். இந்நிலையில், கொல்கத்தாவில் வேலை செய்து வந்த மகேஷ்வர் குமார், கடந்த சில நாட்களுக்கு முன்பு பீகாருக்கு வந்திருந்தார். இவரது மனைவி ராணி குமாரி இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்வதையே வாடிக்கையாக இருந்து வந்துள்ளார். இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் 500க்கும் மேற்பட்ட வீடியோக்கள் பதிவிட்டுள்ள நிலையில், ராணி குமாரிக்கு 9,500க்கும் மேற்பட்ட இன்ஸ்டாகிராம் பாலோயர்கள் உள்ளனர். தனது மனைவியின் இந்த பழக்கத்தை பிடிக்காமல் கணவர் மகேஷ்வர் குமார் அவ்வப்போது கண்டித்துள்ளார்.

இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று ரீல்ஸ் செய்யும் போது கணவர் மகேஷ்வர் குமார் தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் தொடர்ந்ததால், மனைவி ராணி குமாரியை ஆத்திரத்தில் கணவர் மகேஷ்குமாரின் கழுத்தை நெரித்தார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர், மகேஷ்வர் குமாரின் சகோதரர் கொல்கத்தாவில் இருந்து இரவு போன் செய்துள்ளார்.

அப்போது, வேறொருவர் போனில் பேசியதால் சந்தேகமடைந்த மகேஷ்வர் குமாரின் அண்ணன், தந்தையிடம் நேரில் சென்று பார்க்க கூறியுள்ளார். இதையடுத்து, மகேஷ்வர் குமாரின் தந்தையும் சென்று பார்த்தபோது மகன் உயிரிழந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இந்த சம்பவம் குறித்து உயிரிழந்தவரின் தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் சம்பவம் இடத்திற்கு வந்த போலீசார், உயிரிழந்த மகேஷ்வர் குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை அடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார், மனைவி ராணி குமாரி மற்றும் அவரது தாயை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.