பெண் பத்திரிகையாளர் தொடர்ந்த வழக்கில் சுரேஷ் கோபிக்கு முன் ஜாமீன்

மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான சுரேஷ் கோபி பரபரப்புக்கு பஞ்சமில்லாதவர். அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவார். அந்த வகையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கோழிக்கோட்டில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பெண் பத்திரிகையாளர் தோளில் கையை வைத்து தவறாக நடந்ததாக கூறப்பட்டது. அதன்பிறகு சுரேஷ் கோபி “நான் தவறாக நடக்கவில்லை. நான் கடந்து செல்ல வசதியாக அவரது தோளை பிடித்து விலக்கி விட்டேன். அவர் என் மகள் போன்றவர். தவறாக கருதினால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்”. என்று தன்னிலை விளக்கம் அளித்தார்.

என்றாலும் சம்பந்தப்பட்ட பெண் பத்திரிகையாளர் இதுபற்றி கோழிக்கோடு நடக்காவு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சுரேஷ் கோபி மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே சுரேஷ் கோபியின் மகள் திருமணம் வருகிற 17ம் தேதி நடைபெறுகிறது. இதனால் அவர் முன் ஜாமீன் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இதுகுறித்து மாநில அரசு தனது கருத்தினை தெரிவிக்க வேண்டும் என கூறியிருந்தது. இதை தொடர்ந்து இந்த வழக்கில் சுரேஷ் கோபியை கைது செய்யப்போவதில்லை, என்று உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தது கேரள மாநில அரசு. இதனால் சுரேஷ் கோபிக்கு முன் ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.