மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று (09) காலை 9.30 மணியிலிருந்து கடந்த 24 மணித்தியால காலப்பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக வெள்ள நீர் அதிகரித்து வருவதனால் உள்ளூர் போக்குவரத்து தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
இதனால் மாவட்டத்தின் பல பகுதிகளில் பிரதான கால்வாய்கள், ஆறுகள், மற்றும் தாழ்நில பிரதேசங்களில் உள்ள மற்றும் போக்குவரத்தில் ஈடுபடும் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் புலிபாஞ்சகல் கோஸ்வே மற்றும் கிண்ணயடி தொடக்கம் பிரம்படித்தீவு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதனால் இரண்டு படகுசேவைகளை மேற்கொள்ளும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு படகுப் போக்குவரத்து இடம்பெற்று வருகின்றது. .
ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில் ஈரலக்குளம் மற்றும் மயிலவெட்டுவான் பகுதியிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன் மற்றும் சித்தாண்டி தொடக்கம் பெருமாவெளி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதால் அங்கும் இரண்டு படகுசேவைகள் படகு சேவைகள் இடம்பெற்றது.
கோறளைப்பற்று வடக்கு வாகரையில் ஆற்று வெள்ளம் காரணமாக கல்லரிப்பு பிரதேச போக்குவரத்து தடைப்பட்டுள்ளதால் தலா ஒரு உழவு இயந்திர சேவை மற்றும் படகுசேவைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.