Bigg Boss 7 Day 104: `வந்தது பைனல்'; கலங்கிய போட்டியாளர்கள்; இறுதியாக வெளியேறும் நபர்கள்!

யார் எவிக்ட் ஆகிறார் என்கிற ரகசியம்தான் முன்பெல்லாம் கசிந்து கொண்டிருந்தது. இப்போது அது இன்னமும் முன்னேறி யார் வின்னர் என்பதே கசிந்து விட்டது. ‘அர்ச்சனா வெற்றியாளர்’ என்பது மாதிரி உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வருகின்றன. கடந்த சீசன்களில் ‘இவரா, அவரா?’ என்று இரண்டே சாய்ஸ்கள் மட்டுமே இறுதியில் எஞ்சும்.

பிக்பாஸ் வீடு

ஆனால் இந்த சீசனில் அப்படி எவரையும் சொல்ல முடியவில்லை. மட்டுமல்லாமல், இவர்தான் வெற்றியாளர் என்று கூட யாரையும் மனதார சொல்ல முடியவில்லை. ஆளுங்கட்சியின் மீதான அதிருப்தி, எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாக மாறுவதைப் போல மாயாவின் மீதிருந்த கடுமையான வெறுப்பு, அர்ச்சனாவிற்கு சாதகமான அலையை உருவாக்கி விட்டிருக்கலாம். அடைக்கப்பட்ட சூழலில் அந்நிய நபர்களை எவ்வாறு சகித்துக் கொண்டு இணக்கமாக இருக்கிறோம் என்பதுதான் இந்த ஆட்டத்தின் அடிப்படையான சவால். இதில் அர்ச்சனாவின் கிராஃப் பல சமயங்களில் மேலே ஏறியதைப் போலவே கீழேயும் சரிந்திருக்கிறது.

பிக்பாஸ் வீடு

ஒருவர் திறமையான ஆட்டக்காரராக இருந்தால் மட்டும் போதாது. நல்ல பண்புகளை வெளிப்படுத்துபவராகவும் இருக்க வேண்டும். இந்த நோக்கில் மாயா தோற்றுவிட்டார் எனலாம். ராஜதந்திரங்களைத் தாண்டி அவர் வெளிப்படுத்திய வன்மங்களும் உடல்மொழியும் பார்வையாளர்களிடம் கணிசமான அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. மணி ரன்னர் அப்பாம். கடவுளே! இதற்குப் பதிலாக தினேஷ் அல்லது விஷ்ணு வந்திருந்தால் கூட சமாதானம் ஆகியிருக்கும். மணியின் வெற்றிக்கு முக்கால்வாசி கிரெடிட்டை ரவீனாவிற்குத்தான் தர வேண்டும்.

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?

‘ஜூன் போனால் ஜூலைக்காற்றே’ என்கிற அருமையான பாடலுடன் நாள் 104 விடிந்தது. ‘…நட்பாச்சு லவ் இல்லையே…லவ் ஆச்சு நட்பில்லையே…’ என்கிற வரிகளை மணி – ரவீனாவுடன் பொருத்திப் பார்க்கலாம். “நீ கண்டிப்பா டைட்டில் வாங்கிடுவே” என்று அர்ச்சனாவிடம் ஆரூடம் சொல்லிக் கொண்டிருந்தார் விசித்ரா. வெளியில் வந்திருக்கும் ரெஸ்பான்ஸ்களைப் பார்த்து வந்திருப்பார் போல. வீட்டுக்குள்ளேயே அதைத்தான் கிண்டலாகவும் உண்மையாகவும் நம்ப ஆரம்பித்திருக்கிறார்கள். ‘உள்ளே நாம இருக்கறதுக்கும் வெளில இருந்து பார்க்கறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு” என்றார் விசித்ரா.

“விசித்ரா மம்மி என் கிட்ட பேசவேயில்ல” என்று ரவீனாவிடம் அனத்திக் கொண்டிருந்தார் மணி. “உன் ஃபேன்ஸ் என்னைத் திட்டப் போறாங்க. மாதுளை ராஜா கூட சேரவிடலைல்ல” என்று விஷ்ணு பற்றி மறைமுகமாக மாயா சொல்ல, “என்னை சப்போர்ட் பண்றவங்க… அதுதான் கரெக்ட்டுன்றாங்க. நான் அங்க போனதுக்கு என்னைத்தான் காறித் துப்பறாங்க.” என்றார் பூர்ணிமா. (பூர்ணிமாவோட ரசிகர்கள் மட்டுமா அதைப் பண்றாங்க?!).

பிக்பாஸ் வீடு

ஆடுகளைக் குளிப்பாட்டி மஞ்சள் தேய்க்கும் சடங்கு ‘Grooming’ என்கிற பெயரில் நடந்தது. “யார் கிட்டயும் சேராம தனியா இருந்தது யாருன்னு பார்த்தா… பிராவோ, வினுஷா, கானா பாலா, விசித்ரா’ என்று பட்டியலிட்டுக் கொண்டிருந்தார் சுரேஷ். வெளியில் அப்படித்தான் இருந்தார்களாம். (வனிதா எடுத்த க்ரூப் போட்டோக்களில் இவர்கள் இல்லைபோல). “அர்ச்சனாவும் அப்படித்தான். எங்கயுமே எனக்கு ஃபிரெண்ட்ஸ் இருக்க மாட்டாங்கன்னு சொல்லிட்டிருப்பாங்க. இங்கயும் யாரு கூடயும் சேர்ந்து இருக்கல” என்பது சுரேஷின் அபிப்பராயம். “மாயா பொதுவா மத்தவங்களை ஈஸியா கன்ட்ரோல் பண்ணிடுவாங்க. அர்ச்சனாவை அப்படி பண்ண முடியல. பதிலுக்குக் கத்திடுவாங்க” என்றார் பிராவோ.

“ஏன் மிங்கிள் ஆக மாட்றீங்க?” – எதிர் க்ரூப்பிடம் கேட்ட பூர்ணிமா

‘ரயில் விட போலாமா?’ என்கிற பாடலுக்கு மாயாவும் பூர்ணிமாவும் நடன ஒத்திகை பார்த்துக் கொண்டிருக்க ‘க்யூட்டா இருந்தது’ என்றார் ரவீனா. தனது புதிய சிகையலங்காரத்தை ரவீனாவிடம் காட்ட விரும்பிய மணி ‘மூன்றாம் பிறை’ கிளைமாக்ஸ் கமல்ஹாசன் மாதிரி தூரத்திலிருந்து கை காட்டிக் கொண்டேயிருக்க, ரவீனா அதைக் கண்டுகொள்ளவில்லை. அவ்வளவுதான். முகத்தை தூக்கி வைத்துக் கொண்டார் மணி. “நான் கூப்பிட்டபோதே ஏன் வரல?” என்று மணி சிணுங்க “அவங்க டான்ஸ் ஆடிட்டு இருந்தாங்க. பேசிட்டு இருந்தேன். திடீர்னு எப்படி வர்றது?” என்று மன்னிப்பு கோரும் தொனியில் பேசினார் ரவீனா. மணியின் தலையில் அப்படியொன்றும் வித்தியாசம் தெரியவில்லை. அதற்கே தான் வாங்கிய ஆஸ்கர் விருதை உடனே காட்ட வேண்டுமென்கிற பரபரப்பு.

பூர்ணிமா

பேச்சலர்ஸ் டென்ட்டிற்குள் அதிரடியாக உள்ளே நுழைந்த பூர்ணிமா “ஏன். நீங்க நாலு பேரும் மக்களை ஏமாத்திட்டு ஓடின சிட்பண்ட்ஸ்காரங்க மாதிரி இங்க தலைமறைவாவே இருக்கீங்க. வெளில வந்து எல்லோர் கூடயும் பேசி மிங்கிள் ஆகலாம்ல அங்கிள்ஸ்?” என்று கேட்டது சிறப்பான விஷயம். ஆனால் அவர்களோ கோரஸாக சேர்ந்து அனத்தினார்கள். “எதுக்கும்மா வம்பு.. இருக்கறது ஒரு நாள்.. அதை நிம்மதியா கழிச்சுடுவோம்.. அவங்க எதுனா வாயப்புடுங்கறா மாதிரி சொல்வாங்க. நம்ம வாயும் சும்மா இருக்காது. விஷ்ணுவைப் பத்தி மாயா என்னல்லாம் சொன்னாங்க பார்த்தல்ல” என்றார் தினேஷ்.

ரவீனா அந்தப் பக்கம் போனாலே பொசசிவ் ஆகிற மணி மாதிரி, பூர்ணிமா இந்தப் பக்கம் வந்ததால் காண்டான மாயா, “என்ன என் பேரெல்லாம் அடிபடுது?” என்று முனகியபடி அந்தப் பக்கம் வந்தார். “ஒண்ணுமில்லங்க. நான் அப்புறமா சொல்றேன்” என்று பூர்ணிமா சமாதானப்படுத்தினாலும் “நீ ஒண்ணும் சொல்ல வேணாம்” என்று சிணுங்கியபடி அகன்றார் மாயா. விஷ்ணுவுடன் மீண்டும் கூட்டணி அமைத்து விடுவாரோ என்கிற பயம் போல.

“யம்மா.. என் கூட பேச வரலைன்னு அவங்க கிட்ட சொல்லிடுங்க” என்று பூர்ணிமாவிடம் சொன்னார் விஷ்ணு. மாயா என்றாலே மனிதர் பம்மி விடுகிறார்.

‘நீங்க எல்லோருமே பெஸ்ட்’ – சென்டியான பிக் பாஸ்

கசகசவென்று சுவாரசியமில்லாமல் பேசிக் கொண்டிருந்த போட்டியாளர்களை, மைக்கைத் தட்டி மாணவர்களை அமைதிப்படுத்தும் ஹெட்மாஸ்டர் போல “மூன்றாவது மிட்வீக் எவிக்ஷன்” என்கிற அதட்டலைப் போட்டு அமைதிப்படுத்தி விட்டு ‘இப்படி ஏதாச்சும் சொன்னாதான் உங்க வாய் மூடுது’ என்று பங்கப்படுத்தியது சுவாரசியம். ‘உணர்வுப்பரிமாற்றங்களின் நெகிழ்ச்சி’ என்று மக்கள் நிகழ்த்திய ‘அழுகாச்சி காட்சிகளின்’ தொகுப்பை வீடியோவாக வெளியிட்டார். இதிலும் முதல் பரிசு அர்ச்சனாவிற்கே.

பிக்பாஸ் வீடு

“வெளியில் இருக்கிற எக்ஸ்பர்ட்டுகள் ஆயிரம் விமர்சனம் சொல்லட்டும். இந்த வீட்டில் இருந்து ஒரு நாள் வாழ்ந்து பார்த்தாதான் தெரியும். ஊர், உலகம் ஆயிரம் சொல்லட்டும். என்னைப் பொறுத்த வரை நீங்க எல்லோருமே பெஸ்ட். உங்களை நினைச்சு எனக்கு பெருமையா இருக்கு” என்று பரவசமாக பிக் பாஸ் பேசியதைக் கேட்டு பலருக்கு கண்ணீர் வந்தது. ‘யாருடா அடிச்சது.. அண்ணன்தானே உங்களை அடிச்சேன். அழக்கூடாது.. சிரிங்க..” என்பது போல் அவர்களுக்கு ஆறுதல் சொன்னார் பிக் பாஸ்.

எதற்காக பிக் பாஸ் இத்தனை சென்டிமென்ட் காட்டினார் என்றால், ஃபைனலிஸ்ட்டுகளைத் தவிர மற்றவர்கள் அனைவரையும் வெளியில் தள்ளி கதவை மூடுவதற்காகத்தான். (மளிகைக்கடை பில் எவ்ளோ வருது தெரியுமா?!). இதுதான் இந்த வீட்டில் இருக்கிற கடைசி தருணம் என்பதால் மக்கள் பிரிவுத்துயருடன் ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டார்கள். பரிசுப் பொருட்கள் வழங்கிக் கொண்டார்கள். “என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க” என்று விசித்ராவிடம் அடம்பிடித்து காலில் விழுந்தார் அர்ச்சனா.

மாயாவும் பூர்ணிமாவும் அடுத்த ஆறு வருடத்திற்கு சந்திக்க வாய்ப்பில்லை என்பது போல் கன்னத்தோடு கன்னம் ஒட்டி கண்கலங்கி பாசமழை பொழிய, காமிரா க்ளோசப்பில் பொம்மையைக் காட்டியது. “அமைதியா இருங்க. சண்டை போடாதீங்க” என்கிற உபதேசத்தை மாயாவிற்கு செய்தார் பூர்ணிமா. பிறகு இதே உபதேசத்தை விஷ்ணுவிடமும் அவர் சொன்னார். ஆட்டத்திலிருந்து விலகிய பிறகு பூர்ணிமாவிடம் கணிசமான மாற்றத்தைப் பார்க்க முடிகிறது. பெருந்தன்மை கூடியிருக்கிறது.

பிக்பாஸ் வீடு

“எவிக்ட் ஆன போது கூட இவ்ளோ ஃபீல் ஆகல. இன்னிக்குத்தான் கடைசின்ற போது கஷ்டமா இருக்கு” என்று ரவீனா மிகையாக கண்கலங்க அவருக்கு சமாதானம் சொன்னார் மணி. “இன்னமும் ஒரு வாரம் கூட இங்க இருக்கலாம்ன்னு இருக்கு” என்று காலையில் ரவீனா ஏக்கத்துடன் சொன்ன போது “செட்டெல்லாம் பிரிப்பாங்க.. நீ வேணா அவங்க கூடயே இரு” என்று மணி அடித்த கமெண்ட் சிறப்பானது. ரவீனா தொடர்ந்து கண்கலங்க “நீங்க வேற.. அவ பிக் பாஸை நெனச்சு அழறா” என்று பாதுகாப்பாக சொல்லிக் கொண்டார் மணி.

வெளியில் கிளம்பிய முன்னாள் போட்டியாளர்கள்

மாயாவும் பூர்ணிமாவும் மைக்கைக் கழற்றி விட்டு திரைமறைவில் ஒளிந்து ‘விதிமீறல்’ நாடகத்தை மீண்டும் ஜாலியாக நிகழ்த்திக் காட்ட ‘பூர்ணிமா. உங்க மைக்கை மாட்டுங்க’ என்று அப்போதும் கடமையில் கண்ணாக இருப்பது போல பிக் பாஸ் அண்ணாச்சி கமென்ட் அடித்தது சுவாரசியம். அங்கு ஒட்ட வைக்கப்பட்டிருந்த புகைப்படங்களை பூர்ணிமா பிய்த்து எடுத்துக் கொள்ள, மற்றவர்களும் அதைப் பின்பற்றினார்கள். “படத்தை திருடறீங்களா?” என்று விசித்ரா ஜாலியாக ஆட்சேபம் தெரிவிக்க “எப்ப பண்ணக்கூடாதோ.. அப்பல்லாம் விதிமீறல் பண்ணிட்டு.. இப்ப நீங்க சொல்றீங்களா?” என்று விஜய் தந்த கவுன்ட்டர் வசனம் சிறப்பானது.

பூர்ணிமாவும் விஷ்ணுவும் தனியாக ஓரங்கட்டி பேசிக் கொண்டார்கள். “வாரா வாரம் எண்ணைய் தேய்ச்சுக் குளிங்க. நைட்டு ரொம்ப நேரம் கண்ணு முழிக்காதீங்க” என்கிற ரேஞ்சுக்கு பூர்ணிமா உபதேசம் சொல்ல “ஸாரி’ என்றார் விஷ்ணு உருக்கமுடன். மாயா குழு, தானே இயற்றிய ஒரு பாடலை கோரஸாக பாட, ‘எங்க கிட்ட சீப்பு இருக்கு.. நாங்களும் சீவுவோம்’ என்பது போல் பேச்சுலர்ஸ் டீமும் எதையோ போட்டிக்கு கத்தினார்கள். அழுகையுடன் சுரேஷ் ஹைடெசிபலில் கத்தியது வித்தியாசமான ஃபர்பாமன்ஸாக இருந்தது.

பிக்பாஸ் வீடு

“என்னடா கண்ணா.. கௌம்பிட்டியா?’ என்கிற விசுவின் குரலில் “என்னை மறந்துட்டீங்களா?” என்று ஸ்மால் பாஸ் குறுக்கிட்டார். பெரிய பாஸின் கம்பீரமான குரலோடு ஒப்பிடும் போது ஸ்மால் பாஸின் குரல் டொங்கலாகத்தான் இருக்கிறது. பிக் பாஸிற்கு கூட வயதாகி விட்டதுபோல. கம்பீரம் குறையவில்லையென்றாலும் குரலில் நடுக்கம் தெரிய ஆரம்பித்து விட்டது. “விச்சு.. நீங்களுமா என்னை விட்டுப் போறீங்க?” ஸ்மால் பாஸ் கேட்க, டைட்டில் ஜெயித்தது போல் சிரித்தார் விசித்ரா. “ரெண்டு வீடா இருந்தாலும் எங்க வீட்லதான் ஜாலியா இருந்தீங்க” என்று சொல்வதின் மூலம் பிக் பாஸிற்கு ஒழுங்கு காட்டினார் ஸ்மால் பாஸ். “சரி கடைசியா ஒரு டான்ஸ்” என்று அவர் கேட்டுக் கொண்டதின்படி ‘கொக்கர கொக்கரக்கோ’ என்கிற பாடல் ஒலிக்க, அனைவரும் ரேஷன் முறையில வரிசையாக வந்து நடுவில் நின்று ஆடியது சிறப்பான காட்சியாக இருந்தது.

அர்ச்சனாவின் வெற்றி முன்னுதாரணமா?

“யாரையாவது ஹர்ட் பண்ணியிருப்பேன். ஸாரி” என்கிற பிக் பாஸின் டெம்ப்ளேட் வசனத்தை ரவீனா சொல்ல, மற்றவர்களும் அதை அப்படியே ரிப்பீட் செய்தார்கள். “நாம எல்லோரும்தான் டைட்டில் வின்னர்’ என்று சொல்வதின் தன்னுடைய பங்கை பெருந்தன்மையாக எல்லோருக்கும் பிரித்து வழங்கினார் விக்ரம். அனைவரும் விடைபெற்றுக் கொண்டார்கள். டெலிபோன் டைரக்டரி மாதிரியான புத்தகத்தை இறுதிப் போட்டியாளர்களிடம் தந்த பிக் பாஸ், ‘உங்கள் நினைவுகளில் அழுத்தமாகப் பதிந்த விஷயங்களை இதில் எழுதுங்க” என்றார். தேர்விற்கு எழுதுவது போல் ஒவ்வொருவரும் யோசித்து யோசித்து எழுதினார்கள். முத்து முத்தான கையெழுத்து என்பதெல்லாம் இனிமேல் வழக்கில் இருக்காது போலிருக்கிறது. கையால் எழுதுவது, ஆங்கிலம் கலக்காத தமிழில் எழுதுவது என்பதெல்லாம் இனி எதிர்பார்க்க முடியாது. Ini Ellame sms languagethalathan pakka mudiyim pola.

அர்ச்சனா

“உங்களை தினமும் இருபத்து மணி நேரமும் பார்வையாளர்களுக்கு காட்டிக் காட்டிக் கொண்டிருந்த ஒளிபரப்பு சில நிமிடங்களில் நிறைவு பெறப் போகிறது” என்று பிக் பாஸ் அறிவிக்க போட்டியாளர்கள் அதற்காக நன்றி சொன்னார்கள். ஆனால் ஒன்று மட்டும் சொல்ல வேண்டும். ஒரு மணி நேர எபிசோடு பார்த்தவர்களுக்கே நாக்கு தள்ளியிருக்கும். இந்த லட்சணத்தில் 24×7 பார்த்து அதை அணுஅணுவாக சமூகவலைத்தளங்களில் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறவர்களுக்கெல்லாம் ஏதாவது பொறுமைக்கான விருது தரலாம். எத்தனை மனித சக்தி அநாவசியமாக விரயமாகிக் கொண்டிருக்கிறது?!

ஒருவகையில் பார்த்தால் இன்ட்ரோவொ்ட்டுகளும் மற்றவர்களுடன் போட்டியிட்டு மக்களின் மனதைக் கவர்ந்து, உளவியல் நெருக்கடியான போட்டியில் வெல்ல முடியும் என்கிற முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறார் அர்ச்சனா. அவருடைய இந்த வெற்றி பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள். கமென்ட்டில் வந்து சொல்லுங்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.