தவுபல்: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மணிப்பூரின் தவுபல் நகரில் இருந்து நேற்று பாரத ஒற்றுமை நியாய யாத்திரையை தொடங்கினார்.
கடந்த 2022 செப்டம்பர் 7-ம் தேதி தமிழகத்தின் கன்னியாகுமரியில் பாரத ஒற்றுமை பாத யாத்திரையை தொடங்கிய ராகுல் கடந்த 2023-ல் ஜன. 30-ம் தேதி காஷ்மீரின் ஸ்ரீநகரில் நிறைவு செய்தார். அப்போது தமிழகம், கேரளா, காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் 150 நாட்களில் 4,080 கி.மீ. தொலைவு அவர் பாத யாத்திரை மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து 2-ம் கட்டமாக வடகிழக்கு மாநிலமான மணிப்பூரின் தவுபல் நகரிலிருந்துபாரத ஒற்றுமை நியாய யாத்திரையை ராகுல் நேற்று தொடங்கினார்.
மணிப்பூர், நாகாலாந்து, அசாம்,அருணாச்சல், மேகாலயா, பிஹார், ஜார்க்கண்ட், ஒடிசா, சத்தீஸ்கர்,உ.பி., ம.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட பகுதிகளில் 66 நாட்களில் 6,713 கி.மீ. தொலைவுக்கு அவர்யாத்திரை மேற்கொள்ள உள்ளார். வரும் மார்ச் 20-ம் தேதிமும்பையில் அவர் யாத்திரையை நிறைவு செய்கிறார்.
தற்போதைய யாத்திரையின்போது 355 மக்களவைத் தொகுதிகளை ராகுல் காந்தி கடந்து செல்ல உள்ளார். கடந்த 2019-ம்ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது 129 தொகுதிகளில் பாஜக, காங்கிரஸ் இடையே நேரடி போட்டிநிலவியது. இதில் 7 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றது. இதை கருத்தில் கொண்டு மக்களவைத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் ராகுல் காந்தி 2-ம் கட்ட யாத்திரையை தொடங்கி உள்ளார். முதல் நாள் யாத்திரையில் காங்கிரஸ் தலைவர் கார்கே, மூத்த தலைவர்கள் அசோக் கெலாட், சச்சின் பைலட், திக்விஜய் சிங், ஆனந்த் சர்மா, ராஜீவ் சுக்லா உள்ளிட்ட தலைவர்கள், ராகுல் காந்தியுடன் பேருந்தில் பயணம் செய்தனர்.