மட்டக்களப்பில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலர் உணவுப் பொதிகள் அரசாங்க அதிபரிடம் கையளிப்பு!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளப்பாதிப்பினால் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்த மக்களுக்கு கிழக்கு மாகாண சமுக சேவைத்திணைக்களத்தினால் வழங்கப்படும் உலர் உணவுப் பொதிகள் மாவட்ட அரசாங்க அதிபரிடம் நேற்று (17) கையளிக்கப்பட்டது.

கிழக்கு மாகாண சமுக சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் கே. இளங்குமுதன் இவ்வுலர் உணவுப் பொதிகளை அரசாங்க அதிபர் திருமதி. ஜே.ஜே. முரளிதரனிடம் மாவட்ட செயலகத்தில் வைத்து கையளித்தார்.

இவ்வருடம் ஜனவரி 1ம் திகதி முதல் பெய்த கனமழை காரணமாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு வீடுகளை விட்டும் வெளியேறி மாவட்டத்தின் பலபாகங்களிலும் அமைக்கப்பட்டிருந்த நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்த சுமார் 353 குடும்பங்களுக்கான உலர்உணவுப் பொதிகள் இதன்போது அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டது.

ஓவ்வொன்றும் சுமார் 5200 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குறித் பிரதேச செயலகங்களினூடாக சமுக சேவைத்திணைக்களத்தினால் உடனடியாக பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.

இவ்வுலர்உணவுப் பொதிகள் கையளிக்கும் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்சினி ஸ்ரீகாந், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம். றியாஸ், மாவட்ட பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஜதீஸ்குமார், மாவட்ட செயலக உயர் அதிகாரிகள், சமுக சேவைகள் திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலைய அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.