`லைட் இல்லை, பின்னாடியே ஒயின் ஷாப் வேறு..!' – மக்கள் அச்சம்… வேலூர் பழைய பேருந்து நிலைய அவலம்!

வேலூர் கோட்டையின் எதிரே அமைந்துள்ளது வேலூர் பழைய பேருந்து நிலையம். சில ஆண்டுகளுக்கு முன்பு உள்ளூர், வெளியூர் என அனைத்து பேருந்துகளும் இயங்கும், மாவட்டத்தின் முக்கிய பேருந்து நிலையமாக இது இருந்தது. 2021-ம் ஆண்டு, 53.13 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட வேலூர் புதிய பேருந்து நிலையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.

பழைய பேருந்து நிலையம்

இந்த புதிய பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வந்த பிறகு, வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள் புதிய பேருந்து நிலையத்திலிருந்தும், உள்ளூர்ப் பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள் அனைத்தும், பழைய பேருந்து நிலையத்திலிருந்தும் இயக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் திருவண்ணாமலை, விழுப்புரம், சிதம்பரம் போன்ற வெளி மாவட்டங்களுக்குச் செல்லும் ஒரு சில பேருந்துகள், பழைய பேருந்து நிலையத்துக்கு வந்து பயணிகளை ஏற்றிச் செல்வதும் உண்டு.

வேலூர் என்றாலே பலருக்கும் நினைவில் வருவது கோட்டையும், பொற்கோயிலும்தான். சுற்றுலாத் தலங்களான கோட்டைக்கும், பொற்கோயிலுக்கும் நாள்தோறும் ஆயிரக்கணக்கில் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து சுற்றுலாப் பயணிகள் வருவதுண்டு. வேலூரின் பிரபல மருத்துவமனையான கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை போன்ற இடங்களுக்குச் சென்று வர என மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கும் செல்ல… மக்கள் பழைய பேருந்து நிலையத்தைத்தான் பயன்படுத்தி வருகின்றனர்.

பேருந்து நிலையம்

மக்கள் அதிகம் வந்து செல்லும் அத்தகைய பேருந்து நிலையத்தின் தரைப்பகுதிகள் ஆங்காங்கே பெயர்ந்து, எலிகள் தங்கும் இருப்பிடமாக மாறியிருக்கின்றன. இரவு நேரங்களில் எலிகள் நடமாடுவதால், கடித்துவிடுமோ என்ற அச்சத்தில் கால்களைக் கீழே விட்டு அமர, மக்கள் அச்சப்படும் நிலை உள்ளது.

ஒருபுறம் இப்படியிருக்க, மற்றொரு புறம் பயணிகள் அமரும் இடங்கள் இருண்டு கிடக்கின்றன. அந்தப் பகுதியில் இருக்கும் அனைத்து விளக்குகளும் ஒளிராமல் இருக்கின்றன. வெளிச்சம் இல்லாததால், இருக்கைகள் இருந்தும் பயணிகள் பெரும்பாலும் அவற்றில் அமருவதில்லை‌. அங்கே தரையில் அமர்ந்திருந்த ஒரு பெண்ணிடம், `இருக்கைதான் இருக்கிறதே, பின்னர் எதற்காக தரையில் அமர்ந்து கொண்டிருக்கிறீர்கள்?” எனக் கேட்டோம்.

அதற்கு அவர், “உட்கார இடம் இருக்குதான் தம்பி. ஆனா அங்க ஒரே இருட்டா இருக்கு. யாரு வரா போறாங்கனுகூட தெரியல. இங்க பஸ்டாண்ட் பின்னாடியேத்தான் ஒயின் ஷாப்பும் இருக்கு. குடிச்சிட்டு வேணும்னே பக்கத்துல வந்து உட்காருறாங்க. அப்படியிருக்கும்போது அங்கு எப்படி தம்பி உட்கார‌முடியும்… அந்த சேர் (chair) கூட சரியா இல்ல. போல்ட் இல்லையா என்னனு தெரியல… நேத்துக்கூட ஒருத்தவங்க உட்காரும்போது, அப்படியே கவிழ்ந்தடிச்சு விழுந்தாங்க. அதனாலதான், இங்க தரையா இருந்தாலும் சரின்னு வெளிச்சத்துலயே உட்கார்ந்துட்டேன்” என்றார்.

அவர் சொன்னதுபோலவே பேருந்து நிலையத்தின் பல்வேறு இடங்களில் குடித்துவிட்டு சிலர் சென்று கொண்டிருந்தனர். மது பாட்டில்களும் ஆங்காங்கே தென்படவே செய்தன.

பேருந்து நிலையம்

பேருந்து நிலையத்தின் பிற இடங்களிலும் போதிய வெளிச்சமில்லாமல், இருண்டே காணப்படுகிறது. பயணிகள் நிற்கும் இடங்கள், டூவீலர் பார்க்கிங் ஏரியாவாகவும், அங்குத் திறந்தவெளி கடைகள் வைத்துள்ளவர்கள் பொருள்கள் வைக்கும் இடமாகவும்தான் இருக்கின்றன. மக்கள் சிரமமின்றி வந்து செல்ல ஏதுவாகவும் பிரச்னைகளைத் தீர்க்கவும், பழைய பேருந்து நிலையத்தைப் புனரமைக்கவும், பேருந்து நிலையத்துக்குப் பின்புறம் உள்ள மதுபானக் கடையை அகற்றி, இடமாற்றம் செய்திடவும் அரசு முன்வர வேண்டும் என்பது, பயணிகளின் கோரிக்கையாக இருக்கிறது. இதற்குச் செவிசாய்க்குமா மாவட்ட நிர்வாகம்?!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.