பல்லாவரம் சட்டமன்றத் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ கருணாநிதியின் மகனும், மருமகளும் தங்கள் வீட்டில் வேலைசெய்துவந்த 18 வயது பட்டியலினப் பெண்ணை கொடூரமாகத் தாக்கி, துன்புறுத்திய நிகழ்வு, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக, பாதிக்கப்பட்ட பெண்னின் குடும்பத்தினர் அளித்த புகாரின்படி, தி.மு.க எம்.எல்.ஏ கருணாநிதியின் மருமகள் மார்லினா மற்றும் மகன் ஆண்டோ மீது SC/ST வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் உட்பட ஐந்து பிரிவுகளில் போலீஸார் எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்திருக்கின்றனர்.

தொடர்ந்து, பல்வேறு அரசியல் தலைவர்கள், சமூக அமைப்புகள் இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உடனடியாக நீதி கிடைக்கும் வகையில், குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எனக் கூறிவருகின்றனர். அந்த வரிசையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் `வீட்டுவேலைக்காகச் சென்ற இளம்பெண்ணைக் கொடூரமாகத் தாக்கி, தினந்தோறும் துன்புறுத்திய சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மருமகள் மற்றும் மகனை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும்’ என வலியுறுத்தியிருக்கிறார்.
இதுகுறித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் சீமான், “பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் வீட்டில் வேலைசெய்த இளம்பெண்ணை அவரது குடும்பத்தினர் கொத்தடிமைபோல நடத்தி, கொடும் சித்ரவதைக்குள்ளாக்கிய செய்தியானது அதிர்ச்சியளிக்கிறது. தனக்கு நேர்ந்த கொடுமைகளைக் கண்ணீர்மல்கக் கூறும் பெண்ணின் காணொளியைப் பார்க்கிறபோது நெஞ்சம் பதைபதைக்கிறது.

அந்தப் பெண்ணுக்கு நடந்தேறியது சொல்லவியலா மனிதமாவதை, குரூரத்தின் உச்சம். எளிய குடும்பப் பின்னணியில் பிறந்ததால், வறுமையையும், ஏழ்மையையும் போக்க வீட்டு வேலைக்குச் சென்ற பெண்ணுக்கு ஊதியத்தை வழங்காது, இரவு பகலென்றும் பாராது ஓய்வில்லாத வகையில் கடுமையான வேலைகளைக் கொடுத்து உழைப்பைச் சுரண்டியதோடு மட்டுமல்லாது, நினைத்துப் பார்க்கவே முடியாத அளவுக்குக் கொடூரமாகத் தாக்கியும், தினந்தோறும் துன்புறுத்தியும் வந்த அந்தக் குடும்பத்தினரின் செயல் கடும் கண்டனத்துக்குரியது.

ஆளுங்கட்சியின் சட்டமன்ற உறுப்பினரது குடும்பமெனும் அதிகாரத்திமிரே மனிதத்தன்மையற்ற இக்கொடூரங்களை அந்தப் பெண்ணின் மீது பாய்ச்சுவதற்குக் காரணமாக அமைந்திருக்கிறதென்பது வெளிப்படையானதாகும். எளிய மனிதர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்படும் இந்தக் கோரத்தாக்குதல்களும், வன்முறைவெறியாட்டங்களும் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டிய கொடுங்குற்றங்களாகும். ஆகவே, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், இந்த விவகாரத்தில் சீரியக் கவனமெடுத்து, இளம்பெண்ணைக் கொடூரமாகத் தாக்கித் துன்புறுத்திய சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மருமகள் மற்றும் மகனை உடனடியாகக் கைதுசெய்து சிறைப்படுத்த வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்” என்று கூறியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY