ஏப்ரல் 16-ம் தேதி நாடாளுமன்ற தேர்தலா? தேர்தல் ஆணையம் விளக்கம்

புதுடெல்லி:

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தொடர்பான அறிவிப்பு மார்ச் முதல் வாரத்தில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தம் உள்ள 543 மக்களவை தொகுதிகளுக்கு 7 அல்லது 9 கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது.

இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் தொடங்கும் உத்தேச தேதியை தேர்தல் ஆணையம் வெளியிட்டதாகவும், ஏப்ரல் மாதம் 16-ந்தேதிக்கு ஏற்றவாறு தேர்தல் சார்ந்த திட்டங்களை வகுக்கும்படி மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியதாகவும் இன்று மதியம் தகவல் வெளியானது.

டெல்லியில் உள்ள மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மாநில தலைமை தேர்தல் அதிகாரி அனுப்பிய சுற்றறிக்கையை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகின. சுற்றறிக்கையில் உள்ள தேதி தேர்தலுக்கான உத்தேச தேதிதானா? என்ற கேள்வும் முன்வைக்கப்பட்டது.

இதையடுத்து டெல்லி தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட தகவல் வருமாறு:-

சுற்றறிக்கையை குறிப்பிட்டு தேர்தல் தொடங்கும் உத்தேச நாள்தானா? என்பதை தெளிவுபடுத்தும்படி சில ஊடக கேள்விகள் வருகின்றன. தலைமை தேர்தல் ஆணையத்தின் தேர்தல் திட்டமிடலின்படி அதிகாரிகள் தங்கள் பணிகளை திட்டமிட்டு செய்து முடிப்பதற்கு மட்டுமே இந்த உத்தேச தேதி குறிப்பிடப்பட்டுள்ளது என சுற்றறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு டெல்லி தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த பதிவை தலைமை தேர்தல் ஆணையம் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.