மாற்றுத் திறனாளிகளுக்கு தொழில் வழங்கும் விஷேட வேலைத்திட்டத்தின் மற்றுமொரு கட்டம் இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது.
ஜப்பான் சர்வதேச முகவாண்மையகம், சமூக சேவை திணைக்களம், மனித வலு மற்றும் வேலை வாய்ப்பு திணைக்களம் ஆகியவை இணைந்து மாற்றுத் திறனாளிகளுக்கு தொழில் வழங்கும் விஷேட திட்டமொன்றை கடந்த 2022 ஆம் ஆண்டிலிருந்து முன்னெடுத்து வரும் நிலையில் அதன் மற்றுமொரு கட்டம் இன்று (24) திகதி கல்லடி தனியார் விடுதியில் இடம்பெற்றது.
ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகவாண்மையகத்தின் திட்ட பணிப்பாளர் சிமிசூ தகாசி (Shimizu Takashi) தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜே.ஜே.முரளிதரன் கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பித்திருந்தார்.
பிரதம அதிதி உள்ளிட்ட அதிதிகள் வரவேற்கப்பட்டதனைத் தொடர்ந்து மாற்றுத் திறனாளிகளின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்கான விழிப்புணர்வு செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதுடன், 11 தொழில் வழங்குனர்களினால் நேர்முக தேர்வுகள் மேற்கொள்ளப்பட்டு மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கள் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர்கள், மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் திருமதி.சந்திரகலா கோணேஸ்வரன், மனித வலு மற்றும் வேலை வாய்ப்பு திணைக்களத்தின் மாவட்ட இணைப்பாளர் வி.மைக்கல்கொலின், சமூக சேவை திணைக்களத்தின் ESPD திட்டத்தின் இணைப்பாளர் லக்ஷா தீ மற்றும் ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகவாண்மை திட்டத்துடன் தொடர்புடைய உத்தியோகத்தர்கள், சமூக சேவை திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள், மனித வலு மற்றும் வேலை வாய்ப்பு திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள்,
பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.