ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட்; அயர்லாந்தை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி

ப்ளூம்போன்டைன்,

ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) 2 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. இதன்படி 15-வது ஜூனியர் உலகக்கோப்பை போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெற்ற 15-வது லீக் ஆட்டத்தில் இந்தியா – அயர்லாந்து அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற அயர்லாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி அதிரடியாக விளையாடியது. 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 301 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக முஷீர் கான் 118 ரன்கள் குவித்து அசத்தினார். அயர்லாந்து தரப்பில் ஆலிவர் ரிலே 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 302 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து பேட்ஸ்மேன்கள் இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விரைவில் ஆட்டமிழந்தனர். வெறும் 29.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த அயர்லாந்து 100 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி 201 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அயர்லாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக டேனியல் போர்கின் 27 ரன்கள் அடித்தார். இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக நமன் திவாரி 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.