ராமர் கோவில் நீதித்துறை செயல்பாட்டின் மீதான நம்பிக்கைக்கு சான்று – ஜனாதிபதி திரவுபதி முர்மு

புதுடெல்லி,

75-வது குடியரசு தினத்தையொட்டி நாட்டுமக்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு சிறப்புரை ஆற்றினார். அவர் கூறியதாவது:-

நாட்டு மக்கள் அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள். நாளை நம் நாட்டின் அரசியலமைப்பு துவக்கத்தை கொண்டாடும் பொன்னான நாள். இந்தியாவின், ஜனநாயக அமைப்பு மேற்கத்திய ஜனநாயகத்தின் கருத்தை விட மிகவும் பழமையானது. அமிர்த காலத்தை நோக்கி இந்தியா சென்று கொண்டிருக்கிறது. நம் நாட்டை ‘ஜனநாயகத்தின் தாய்’ என்று அழைக்கிறோம்.

அயோத்தியில் புகழ்பெற்ற புதிய கோவிலில் ராமர் சிலையின் வரலாற்று சிறப்புமிக்க பிராண பிரதிஷ்டை நிகழ்ச்சியை நாம் கண்டு கழித்தோம். ராமர் கோவில் மக்களின் நம்பிக்கை மட்டுமல்ல. நீதித்துறை செயல்பாட்டின் மீதான நம்பிக்கைக்கும் சான்று.

நாட்டின் விடுதலைக்காக தங்கள் இன்னுயிரை வழங்கிய அனைவருக்கும், அரசியல் அமைப்பை உருவாக்க பங்களித்தவர்களுக்கும் இன்று நாம் மரியாதை செலுத்துவோம். நமது இலக்குகளை அடைய ஒவ்வொருவரின் பங்களிப்பும் முக்கியமானதாக இருக்கும்.

சமீபத்திய காலங்களில், உலகம் முழுவதும் பல மோதல்கள் வெடித்துள்ளன. உலகின் பல பகுதிகள் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளன. பெரிய அளவில் மனிதாபிமான துயரங்கள் தொடர்கின்றன. இதற்காக வருத்தப்படுகிறோம். ஒருபோதும் பகைமையின் மூலம் பகைகள் தணிக்கப்படுவதில்லை, ஆனால் அவை அகிம்சையின் மூலம் தணிக்கப்படுகின்றன.

மோதல்களில் சிக்கியுள்ள பிராந்தியங்கள் அமைதியை ஏற்படுத்துவதற்கு வழியைக் கண்டுபிடிக்கும் என்று நம்புவோம். இவ்வாறு அவர் உரையாற்றினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.