வழக்கறிஞர்களுக்கான கட்டண பாக்கி ரூ.2.39 கோடியை 4 வாரத்தில் வழங்குவதாக தமிழக அரசு உறுதி @ ஐகோர்ட்

சென்னை: முன்னாள் அரசு வழக்கறிஞர்களுக்கு வழங்க வேண்டிய கட்டண பாக்கி ரூ.2.39 கோடி நான்கு வாரங்களில் வழங்கப்படும் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதி தெரிவித்துள்ளது.

அரசு வழக்கறிஞருக்கு கட்டணம் வழங்குவது தொடர்பான வழக்கில், கட்டணங்கள் முழுமையாக வழங்காதது ஏன் என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக தலைமைச் செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு, நீதிபதிகள் சுரேஷ்குமார், குமரேஷ் பாபு ஆகியோர் அடங்கிய அமர்வில் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா தாக்கல் செய்த அறிக்கையில், முன்னாள் தலைமை வழக்கறிஞர், முன்னாள் கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள் மற்றும் முன்னாள் அரசு வழக்கறிஞர்களுக்கு வழங்க வேண்டிய கட்டணங்களில் 23.60 கோடி ரூபாய் வழங்கப்பட்டு விட்டது.

தற்போதைய அரசு வழக்கறிஞர்களுக்கான 673 கட்டண ரசீதுகளில், 199 ரசீதுகளுக்கான கட்டணங்கள் 10 நாட்களில் வழங்கப்படும், என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.மேலும், முன்னாள் அரசு வழக்கறிஞர்களுக்கு வழங்கப்பட வேண்டிய கட்டண பாக்கி தொகையான 2.39 கோடி ரூபாய் 4 வாரங்களில் வழங்கப்படும், என்று தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எ.ஸ் ராமன் உறுதி தெரிவித்தார். இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் விசாரணையை மார்ச் 4-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.