Information in Gnanavabi Archeology Department report on temple site | கோவில் இடத்தில் ஞானவாபி தொல்லியல் துறை அறிக்கையில் தகவல்

வாரணாசி, உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் ஞானவாபி வளாகம் கட்டமைக்கப்பட்டுள்ள இடத்தில், ஏற்கனவே ஹிந்து கோவில் இருந்ததற்கான அடையாளங்கள் உள்ளதாக தொல்லியல் துறையினர் நடத்திய ஆய்வில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தின் வாரணாசியில், காசி விஸ்வநாதர் கோவிலை ஒட்டியுள்ள ஞானவாபி வளாகம் தொடர்பான வழக்கு, வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த விவகாரத்தில், தொல்லியல் துறை ஆய்வு செய்ய, மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதை அலகாபாத் உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.

இந்த விவகாரத்தில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுத்தது. இதையடுத்து, தொல்லியல் துறையின் ஆய்வு நடந்து, கடந்த ஆண்டு டிச., 18ல் ஆய்வறிக்கை, சீலிட்ட உறையில் மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

அப்போது ஹிந்துக்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அந்த அறிக்கையை வெளியிட வேண்டும் என்று வாதிட்டார். ஆனால், தேவையில்லாத குழப்பங்கள், பிரச்னைகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக, தொல்லியல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த அறிக்கையை வெளியிடுவது தொடர்பாக ஆய்வு செய்த மாவட்ட நீதிமன்றம், நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்தது. இதன்படி, இந்த அறிக்கையை, வழக்கில் தொடர்புடைய, ஹிந்து மற்றும் முஸ்லிம் என, இரு தரப்புக்கும் வழங்க உத்தரவிட்டதுடன், இது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய இரு தரப்புக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே தொல்லியல் துறை ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ள தகவல்களை, ஹிந்து அமைப்பு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின் நேற்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

தற்போது ஞானவாபி வளாகம் அமைந்துள்ள இடத்தில், ஏற்கனவே மிகப்பெரிய ஹிந்து கோவில் இருந்ததற்கான சாட்சியங்கள், தொல்லியல் துறை ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த ஹிந்து கோவிலின் துாண்களில் சிறிய மாற்றங்கள் செய்து, அதன்மீது கட்டுமானங்களை எழுப்பி ஞானவாபி வளாகத்தை கட்டமைத்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஞானவாபி வளாகத்தின் மேற்கு பகுதியில் உள்ள சுற்றுச்சுவர், ஏற்கனவே இருந்த ஹிந்து கோவிலின் ஒரு பகுதி என்றும் தொல்லியல் துறையின் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹிந்து கோவிலில் பயன்படுத்தப்பட்ட சிலைகள், அங்குள்ள நிலத்தின் கீழ் புதைக்கப்பட்டு இருந்ததையும் தொல்லியல் துறை அதிகாரிகள் கண்டறிந்துள்ளதையும் அறிக்கையில் சுட்டிகாட்டப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில், ஹிந்து கோவிலில் இருந்த கல்வெட்டுகளில் தேவனகரி, தெலுங்கு, கன்னடம், கிராந்தி உட்பட 32 வகையான எழுத்துகள் இருந்ததையும் கண்டறியப்பட்டு உள்ளது.

இந்த எழுத்துகளின் வாயிலாக ஜனார்த்தனா, ருத்ரா, உமேஸ்வரா ஆகிய மூன்று ஹிந்து கடவுள்களின் பெயர்களும் இருப்பதை உறுதி செய்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.