பீகார் மாநில பாஜக செயற்குழு கூட்டம் நாளை நடைபெறும் என அறிவிப்பு

பாட்னா,

பீகார் மாநில முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதாதள தலைவருமான நிதிஷ்குமார், கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலையும், 2020-ம் ஆண்டு சட்டசபை தேர்தலையும் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து சந்தித்தார். இதையடுத்து பாஜகவை விட்டு விலகிய அவர், வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்துவதற்காக ‘இந்தியா’ கூட்டணியை அமைப்பதில் முக்கிய பங்கு வகித்தார்.

ஆனால், சமீபகாலமாக ‘இந்தியா’ கூட்டணி கட்சிகள் மீது அவருக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இதனால் சமீபத்தில் காணொலி காட்சி மூலம் நடந்த ‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை. அதே சமயத்தில், சமீபகாலமாக பா.ஜனதாவுடன் நிதிஷ்குமார் நெருக்கம் காட்டி வருகிறார். இந்த பின்னணியில், நிதிஷ்குமார் ‘இந்தியா’ கூட்டணியில் இருந்து வெளியேறி பா.ஜனதாவுடன் மீண்டும் கைகோர்ப்பார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த சூழலில், பீகார் மாநில பாஜக செயற்குழு கூட்டம் நாளை மற்றும் நாளை மறுநாள் என இரு நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பீகார் மாநில பாஜக பொறுப்பாளர் வினோத் தாவ்டே நாளை பாட்னாவிற்கு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பீகார் அரசியலில் பரபரப்பான சூழலில் பாட்னாவில் ஐக்கிய ஜனதாதளம், பாஜக தனித்தனியே ஆலோசனை மேற்கொண்டுள்ளன. பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமாரின் அரசியல் நகர்வுகள் பேசுபொருளாகியுள்ள நிலையில் பாஜக செயற்குழு கூடுகிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.