மகளிர் 5 பேர் உலகக்கோப்பை ஆக்கி; காலிறுதியில் நியூசிலாந்தை பந்தாடி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா

மஸ்கட்,

முதலாவது ஐவர் மகளிர் ஆக்கி உலகக்கோப்பை போட்டி ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடைபெற்று வருகிறது.. இதில் 16 நாடுகள் பங்கேற்றிருந்தன. அவை 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோதின. லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடித்த அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றன.

இதில் இந்தியா ‘சி பிரிவில்’ அமெரிக்கா, போலந்து, நமீபியா ஆகிய அணிகளுடன் இடம்பெற்றிருந்தது. இந்திய அணி தனது லீக் சுற்று ஆட்டத்தில் தோல்வியே சந்திக்காமல் காலிறுதிக்கு தகுதி பெற்றது.

இந்நிலையில் இந்திய அணி தனது காலிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்துடன் இன்று மோதியது. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி அடுத்தடுத்து கோல்களை போட்டு தாக்கியது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி 11-1 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தை பந்தாடி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இந்திய அணி தரப்பில் தீபிகா சோரெங், ருதஜா தாதாசோ பிசல் ஆகியோர் தலா 3 கோல்களும், மும்தாஜ் கான், மரியானா குஜூர் ஆகியோர் தலா 2 கோல்களும் மற்றும் ஹெபி ஓரிவா 1 கோலும் அடித்தனர்.

இந்திய அணி தனது அரையிறுதி ஆட்டத்தில் இன்றிரவு தென் ஆப்பிரிக்க அணியுடன் மோத உள்ளது. இந்த தொடரில் இந்திய அணி தோல்வியே சந்திக்காமல் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.