திருவனந்தபுரம், ஜன. 26-
சட்டசபை கூட்டத் தொடரில் உரை நிகழ்த்த வந்த கேரள கவர்னர் ஆரிப் முகமது கான், தன் உரையின் கடைசி பத்தியை மட்டும் படித்துவிட்டு ஐந்து நிமிடத்தில் சபையை விட்டு வெளியேறினார்.
கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியை சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.
மோதல்
இம்மாநில சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல், கவர்னர் காலம் தாழ்த்தி வருவதை அடுத்து, மாநில அரசுக்கும், கவர்னருக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது.
கவர்னர் செல்லும் இடமெல்லாம், ஆளும் இடதுசாரி அரசின் மாணவர் அமைப்பினர் கறுப்புக் கொடி காட்டி கவர்னருக்கு எதிராக கோஷம் எழுப்பி வருகின்றனர்.
நிலைமை இப்படி இருக்க, கேரள சட்டசபை கூட்டத் தொடர் நேற்று துவங்கியது. சபையில் உரையாற்றுவதற்காக கவர்னர் ஆரிப் முகமது கான், சட்டசபைக்கு நேற்று காலை வந்தார்.
அவரை சபாநாயகர் ஏ.என்.ஷம்சீர், முதல்வர் பினராயி விஜயன், சட்டசபை விவகாரத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
சரியாக 9:00 மணிக்கு கவர்னர் உரை நிகழ்த்த துவங்கினார். மொத்தம் 62 பக்கங்கள், 136 பத்திகள் அடங்கிய உரையின் கடைசி பத்தியை மட்டும் கவர்னர் வாசித்தார். 9:00 மணிக்கு துவங்கிய அவரது உரை, 9:02க்கு முடிவடைந்தது.
பின், தேசிய கீதம் ஒலித்தது. அது முடிந்ததும், 9:04 மணிக்கு சபையை விட்டு கவர்னர் வெளியேறினார். ஐந்து நிமிடங்கள் கூட கவர்னர் சபையில் இல்லாதது உறுப்பினர்களை அதிர்ச்சி அடைய செய்தது.
கவர்னர் தன் உரையில் வாசித்ததாவது:
நம் மிகப் பெரிய பாரம்பரியம், கட்டடங்களிலோ, நினைவு சின்னங்களிலோ இல்லை. நம் அரசியலமைப்பின் விலைமதிப்பற்ற மரபு, ஜனநாயகம், மதச்சார்பின்மை, கூட்டாட்சி, மற்றும் சமூகநீதி ஆகியவற்றின் மீது நாம் காட்டும் மரியாதையில் உள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
கூட்டாட்சியின் சாராம்சமே இத்தனை ஆண்டு களாக நம் நாட்டை ஒற்றுமையுடனும், வலுவாகவும் வைத்திருந்தது, இந்த சாரம் நீர்த்துப்போகாமல் இருப்பதை உறுதி செய்வது அனைவரின் கடமை.
இந்த மாறுபட்ட மற்றும் அழகான தேசத்தின் ஒரு பகுதியாக நாம் அனைவரும் ஒன்றிணைந்து, நம் வழியில் வீசப்படும் அனைத்து சவால்களையும் முறியடித்து, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை எட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கண்டனம்
‘கவர்னர் ஆரிப் முகமது கான் தன் அரசியலமைப்பு கடமையை சரியாக நிறைவேற்றினார். உரை நிகழ்த்துவதில் அவருக்கு சில சிரமங்கள் இருப்பின் உரையை இவ்வாறு முடிக்கலாம்’ என, ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி தெரிவித்தது.
அதே நேரம், ‘கவர்னர் உரையின் கடைசி பத்தியை மட்டும் படித்துவிட்டு வெளியேறுவது சட்டசபையை அவமதிக்கும் செயல்’ என, எதிர்க்கட்சியான காங்., கண்டனம் தெரிவித்துஉள்ளது.
‘நிதி நெருக்கடி உட்பட அனைத்து பிரச்னைகளுக்கும் மத்திய அரசை குற்றஞ்சாட்டும் இடதுசாரி அரசின் முயற்சிக்கு கவர்னர் பதிலடி கொடுத்துள்ளார்’ என, பா.ஜ., தெரிவித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்