திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உட்பட தமிழகத்தில் 11 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

சென்னை: திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உட்பட தமிழகத்தில் 11 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக உள்துறை செயலாளர் அமுதா பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: கட்டாய காத்திருப்போர் பட்டியலில் இருந்த காவல் கண்காணிப்பாளர் ஆர்.சீனிவாசபெருமாள், திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராகவும், திருவள்ளூர்மாவட்ட காவல் கணிகாணிப்பாளராகப் பணியாற்றிய பா.சீபாஸ் கல்யாண், பொருளாதாரக் குற்றப்பிரிவு (தெற்கு மண்டலம்) காவல்கண்காணிப்பாளராகவும், சென்னை கொளத்தூர் துணை காவல் ஆணையர் எஸ்.சக்திவேல்,சென்னை பாதுகாப்பு பிரிவு (எஸ்பிசிஐடி) காவல் காண்காணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய குற்றப் புலனாய்வு பிரிவுகாவல் காண்காணிப்பாளர் ஆர்.பாண்டியராஜன், கொளத்தூர் துணை காவல் ஆணையராகவும், திருப்பூர் காவல் கண்காணிப்பாளர் பி.சாமிநாதன், லஞ்ச ஒழிப்பு (தெற்குசரகம்) காவல் கண்காணிப்பாளராகவும், லஞ்ச ஒழிப்பு (சென்னைவடக்கு சரகம்) காவல் கண்காணிப்பாளர் வி.ஷியாமளா தேவி, மத்திய குற்ற புலனாய்வு பிரிவு காவல் கண்காணிப்பாளராகவும், லஞ்ச ஒழிப்பு (தெற்கு சரகம்) காவல் கண்காணிப்பாளர் வி.சரவணக்குமார், லஞ்ச ஒழிப்பு (சென்னை வடக்கு சரகம்) காவல் கண்காணிப்பாளராக பணியிடம் மாற்றப்பட்டுள்ளனர்.

இதேபோல், திருப்பூர் வடக்கு சட்டம் – ஒழுங்கு துணை ஆணையர் அபிஷேக் குப்தா, திருப்பூர் காவல்கண்காணிப்பாளராகவும், சென்னை அண்ணாநகர் துணை காவல் ஆணையர் ரோகித் நாதன்ராஜகோபால், கோவை வடக்கு சட்டம் – ஒழுங்கு துணை காவல் ஆணையராகவும், கோவை போக்குவரத்து துணை ஆணையர் எம்.ராஜராஜன், திருப்பூர் வடக்கு சட்டம் – ஒழுங்கு துணை ஆணையராகவும், மதுரை வடக்கு சட்டம் – ஒழுங்கு துணை ஆணையர் ஜி.எஸ்.அனிதா, நெல்லை தலைமையக துணை காவல் ஆணையராகவும் பதவி வகிப்பார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

செய்தியாளர் தாக்குதல் சம்பவம்: திருப்பூரில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் நேசபிரபு மீது ஒரு கும்பல் கொலை வெறி தாக்குதல் நடத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. தாக்குதலுக்கு முன்பாக, போலீஸிடம் தன்னை ஒரு கும்பல்நோட்டமிடுவதாகவும், தனக்கு பாதுகாப்பு வேண்டும் என்றும் நேசபிரபு தெரிவித்த நிலையில், போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்காததால், அவர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக பல்வேறு தரப்பில் காவல்துறைக்கு கண்டனங்கள் எழுந்தன.

இந்நிலையில், தற்போது திருப்பூர் காவல் கண்காணிப்பாளர், திருப்பூர் வடக்கு சட்டம் -ஒழுங்கு துணை ஆணையரை பணியிட மாற்றம் செய்து உள்துறைசெயலாளர் அமுதா உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.