கொல்கத்தா: காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர்ரஞ்சன் சவுத்ரி செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரை சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. ஆனால் மேற்கு வங்கத்தில் பல இடங்களில் எங்களுக்கு அனுமதியை மறுத்துவருகிறது திரிணமூல் காங்கிரஸ்அரசு. ராகுலின் யாத்திரையின்போது சிலிகுரி பகுதியில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டோம்.ஆனால் அங்கு எங்களுக்கு அனுமதி தரவில்லை.
இந்த விஷயத்தில் மாநில அரசிடமிருந்து சிறந்த ஒத்துழைப்பை நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால் அது நடைபெறவில்லை.
நாளை (இன்று) கூச் பெஹார்பகுதியில் யாத்திரை நடைபெறவுள்ளது. இதற்காக சில நாட்களுக்கு முன்னதாகவே அனுமதி கோரியிருந்தோம். மணிப்பூர், அசாம் மாநிலங்களில் எங்களுக்கு சில தடைகள் ஏற்பட்டன. தற்போது அதேபோன்ற பிரச்சினையை மேற்கு வங்கத்திலும் எதிர்கொள்கிறோம்.
யாத்திரை நிகழ்ச்சியில் தடை களை ஏற்படுத்த முயல்கிறது மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் அரசு.
இவ்வாறு அவர் கூறினார்.