Dhanya Balakrishna: "தொழில் மேல் சத்தியம்…" – சர்ச்சைகளுக்கு விளக்கமளித்த நடிகை தன்யா பாலகிருஷ்ணா

ரஜினி கெளரவ கதாபத்திரத்தில் நடிக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள ‘லால் சலாம்’ படத்தில் நடிகை தன்யா நடித்துள்ளார்.

அவரது பெயரிலான பதிவு ஒன்றில் “தண்ணீருக்காக எங்களிடம் பிச்சை எடுக்கிறீர்கள். மின்சாரத்திற்காகப் பிச்சை எடுக்கிறீர்கள். எங்கள் பெங்களூரை ஆக்ரமித்து கொச்சைப்படுத்துகிறீர்கள். எங்களிடம் பிச்சை கேட்பதால். இதையும் தருகிறோம். உங்களுக்கு வெட்கமாக இல்லையா” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதுமட்டுமின்றி ‘தமிழ் படங்களில் நடிக்க மாட்டேன்’ என்று தன்யா கூறியதகாவும் சமூகவலைதளங்கில் பேசுபொருளாகி ‘HateDhanya’ எனும் ஹாஷ்டாக் ட்ரெண்டிங்கானது.

தன்யா பாலகிருஷ்ணா

12 வருடங்களுக்கு முன் நடந்த இந்த சர்ச்சைகள் தற்போது தன்யா ‘லால் சலாம்’ படத்தில் நடித்துள்ளதால் மீண்டும் பேசுபொருளாக ஆரம்பித்தது.

இந்நிலையில் தன்னைப் பற்றிய சர்ச்சைகளுக்கு விளக்கமளித்துள்ள தன்யா, “நான் செய்யும் தொழில் மேல் சத்தியம்…கடந்த சில நாட்களாகச் சமூக வலைதளங்களில் தமிழர்களை இழிவு படுத்தும் விதமாக நான் கூறியதாகப் பகிரப்பட்டு வரும் கருத்து நான் கூறியதே அல்ல. 12 வருடம் முன்பு இது நடந்த போதே நான் இதைத் தெளிவுபடுத்த முயன்றேன்… அதையே இப்பொழுதும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

அந்த பதிவை நான் பதிவிடவே இல்லை. அந்த ஸ்கீர்ன் ஷாட், ஒரு ட்ரோல் செய்யும் நபரால் உருவாக்கப்பட்டு பகிரப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக இதை ஆதாரபூர்வமாக நிரூபிக்க எவ்வளவு முயன்றும் என் சக்திக்கு உட்பட்டு என்னால் முடியவில்லை. இந்த 12 வருடங்கள், நான் இதைப் பற்றி பேசாமல் இருந்ததற்குக் காரணம் அந்த சம்பவம் நடந்த சமயத்தில் என் மீதும் என் குடும்பத்தின் மீதும் வந்த அச்சுறுத்தல்கள்தான். அதிலிருந்து விலகி இருப்பதே எனக்குச் சரி என்று பட்டது. இப்பொழுது இந்த சந்தர்ப்பத்தில் மீண்டும் இதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். அந்தக் கருத்து நான் கூறியதே அல்ல.

தன்யா பாலகிருஷ்ணா

நான் என் சினிமா பயணத்தைத் துவங்கியதே தமிழ் சினிமாவில் தான். தமிழ் சினிமாவில் வேலை செய்ய வாய்ப்பு கிடைத்தமைக்கு நான் என்றும் நன்றி கடன் பட்டுள்ளேன். அப்பொழுதும் இப்பொழுதும் என் நெருங்கிய நண்பர்களில் பலரும் தமிழர்களே… அதனால் விளையாட்டுக்குக்கூட இப்படி ஒரு கருத்தை சொல்ல நான் என் கனவிலும் நினைக்க மாட்டேன். என் ஆரம்ப காலங்களில் தமிழ் சினிமா ரசிகர்களும் ஊடகங்களும் கொடுத்த ஆதரவே இத்தனை வருடம் தொடர்ந்து நடிக்க எனக்கு ஊக்கமாய் அமைந்திருக்கிறது.மனிதாபிமான அடிப்படையிலும், நான் யாரையும் காயப்படுத்தும் விதத்தில் எந்த வித சொல்லையோ செயலையோ செய்யக்கூடியவள் அல்ல.

இந்த சம்பவம் நடந்ததற்குப் பின் நான் சில தமிழ் திரைப்படங்களும் (ராஜா ராணி, நீதானே என் பொன் வசந்தம், கார்பன்) சில தமிழ் வெப் சீரிஸ்களிலும் நடித்துள்ளேன். அப்போது இது போன்ற எதிர்வினைகள் எதுவும் நேரவில்லை.சர்சைக்குரிய இந்த கருத்து என்னுடையது இல்லை என்றாலும், துரதிர்ஷ்டவசமாக என் பெயர் இதில் சம்மந்தப்படுத்தப்பட்டுவிட்டது…அதனால் நான் தமிழ் மக்களிடம் முழு மனதாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என் பெயரை வைத்து உங்களை காயப்படுத்தும் விதமாக நடந்த செயலுக்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்.

தன்யா பாலகிருஷ்ணாவின் விளக்கம்

இந்த சர்ச்சையினால் திரு.ரஜினிகாந்த், ஐஷ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் ரஜினிகாந்த் ரசிகர்கள் அனைவர்களுக்கும் ஏற்பட்ட சிரமங்களுக்கும் மனவுளைச்சலுக்கும் எனது மனவருத்தத்தை தெரிவித்து கொள்கின்றேன்.நான் இதை செய்யவில்லை என்பதை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லாமல் தவித்துக்கொண்டு உங்கள் முன் இந்த கோரிக்கையை வைக்கிறேன். என் தொழில் மேல் சத்தியம் செய்து நான் கூறும் இந்த உண்மையை ஏற்று கொள்வீர்கள் என்ற நம்பிக்கையோடு அன்புடன், தன்யா பாலகிருஷ்ணா” என்று விளக்கமளித்துள்ளார். இது சமூகவலைதளங்களில் பேசுபொருளாகி வருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.