திரிஷாவினால் விடாமுயற்சி படத்துக்கு வந்த சிக்கல்

பொன்னியின் செல்வன், லியோ படங்களை அடுத்து தற்போது அஜித்துக்கு ஜோடியாக விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார் திரிஷா. இந்த படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் தொடங்கிய போது அஜித்துடன் இணைந்து நடித்து வந்தார் திரிஷா. ஆனால் பின்னர் விடாமுயற்சி படத்தின் கலை இயக்குனர் பிரியன் மாரடைப்பால் இறந்ததால் சிறிது காலம் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.

அதன் பிறகு கடுமையான பனிப்பொழிவு மற்றும் சூறாவளி வீசியதால் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு நாடு திரும்பினார்கள். இப்போதும் அதே பனிப்பொழிவு நிலவிக் கொண்டிருப்பதால் அடுத்தபடியாக சென்னையில் செட் போட்டு படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளார்கள். ஆனால் இப்படி பலமுறை படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதால் திட்டமிட்டபடி படக்குழுவால் திரிஷாவின் கால்ஷீட்டை பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை.

அடுத்தபடியாக மணிரத்னம் இயக்கும் தக்லைப் படத்தில் கமலுடன் நடிக்கும் திரிஷா, மலையாளத்தில் ராம், ஐடென்டிட்டி மற்றும் ஹிந்தியில் சல்மான் கானுடன் ஒரு படம் என பல படங்களுக்கு கால்சீட் கொடுத்து விட்டதால் விடாமுயற்சி படத்திற்கு மீண்டும் கால்ஷீட் கொடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாம். இதன் காரணமாக அஜித் சம்பந்தப்பட்ட காட்சிகளை முதலில் படமாக்கிவிட்டு திரிஷாவின் கால்சீட் எப்போது கிடைக்கிறதோ அப்போது அவர்கள் இருவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்குவதற்கு இயக்குனர் மகிழ்திருமேனி திட்டமிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.