ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பிரிட்டன் தாக்குதல்

லண்டன்,

இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக ஹமாஸ் மீது போர் அறிவித்த இஸ்ரேல், காசா முனையில் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலுக்கும், ஹமாஸ் ஆயுதக்குழுவுக்கும் இடையேயான போர் 3 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது.

இந்த போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவுக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் குழு ஆதரவு அளித்து வருகிறது. மேலும், செங்கடல் வழியாக இஸ்ரேல் மற்றும் இஸ்ரேலின் ஆதரவு நாடுகளுக்கு செல்லும் சரக்கு கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக, ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களின் நிலைகளை குறிவைத்து அமெரிக்கா மற்றும் பிரிட்டன் வான்வழி தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்த நிலையில், ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களின் நிலைகள் மீது நேற்று இரவு பிரிட்டன் விமானப்படை தாக்குதல் நடத்தி, கிளர்ச்சியாளர்களின் நிலைகளை மேலும் சிதைத்ததாக பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்து இருப்பதாவது:-

நேற்று இரவு, பிரிட்டன் விமானப்படை விமானங்கள், ஏமனில் உள்ள குறிப்பிட்ட ஹவுதி ராணுவ இலக்குகளை வெற்றிகரமாக தாக்கி, ஹவுதி கிளர்ச்சியாளர்களின் நிலைகளை மேலும் சிதைத்தது. பிரிட்டன் மற்றும் சர்வதேச கப்பல்கள் மீதான சமீபத்திய தாக்குதல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. அப்பாவி உயிர்களைப் பாதுகாப்பதும் சுதந்திரத்தைப் பாதுகாப்பதும் நமது கடமை” என்று தெரிவித்து உள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.