அப்பா படத்திற்கு விளம்பர யுக்தி தேவையில்லை: ஐஸ்வர்யா ரஜினி

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'லால் சலாம்'. கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி உள்ள இந்த படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சிறப்பு தோற்றத்தில் ரஜினிகாந்த், முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் ஆகியோர் நடித்துள்ளனர்.

படத்தின் முன் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேசியதாவது: ஒரு ஊரில் நடக்கும் கிரிக்கெட் மேட்ச். அந்த போட்டியில் நடக்கும் பிரச்னையால் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை. விளையாட்டு வினையாக முடிந்தால் என்ன நடக்கும் என்பதுதான் படம் சொல்லும் விஷயம். இந்தப் படம் மக்கள் சார்ந்த அரசியலைப் பேசுகிறது. அரசியல் எல்லாவற்றிலும் இருக்கிறது. அது நாம் பார்வையை பொறுத்து மாறுகிறது. நீங்கள் செய்யும் வேலைக்கு நேர்மையாகவும், நம்பிக்கையாகவும் இருந்தால் மலையைக் கூட கட்டி இழுத்துவிடலாம் என்பதுதான் படம் சொல்லும் செய்தி.

முன்பு நடந்த இசை வெளியீட்டு விழாவில், அப்பா குறித்து பேசினேன். விழா அன்று நான் என்ன பேசப் போகிறேன் என்பதுகூட அப்பாவுக்கு தெரியாது. நான் அதிகம் பேசமாட்டேன் என்ற தைரியத்தில் அமர்ந்திருந்தார். ஆனால் நான் அவருக்கு அதிர்ச்சி கொடுத்துவிட்டேன். “லால் சலாம் படத்தின் விளம்பர யுக்தியா?” என விமான நிலையத்தில் அப்பாவிடம் கேட்டுள்ளனர். இப்படியான எந்த ஐடியாவும் எங்களுக்கு இல்லை. அப்படி பேசி படம் ஓட வேண்டும் என்ற தேவையுமில்லை. என்னையும் சரி, என் சகோதரியையும் சரி, எங்களின் சொந்த கருத்துரிமையை ஊக்குவிக்கும் ஒருவர் அப்பா. அவரிடம் அப்படியொரு கேள்வி கேட்டது கஷ்டமாக இருந்தது. என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.