பல மாநிலங்களில் ஆட்சியை கவிழ்த்த பா.ஜ.க. – காங்கிரஸ் குற்றச்சாட்டு

புதுடெல்லி,

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளையுடன் முடிவடைய இருந்த நிலையில், மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அப்போது காங்கிரஸ் தலைமையிலான 2014-க்கு முந்தைய மத்திய அரசின் 10 ஆண்டு காலத்தில் இந்தியாவின் பொருளாதார நிலையுடன் தற்போது மோடியின் 10 ஆண்டு கால ஆட்சியில் இந்தியாவின் பொருளாதாரத்தை ஒப்பிடும் வகையில் மத்திய அரசு வெள்ளை அறிக்கை கொண்டு வர இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் இரு அவைகளிலும் வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்ய இருக்கிறார். அதன்மீது விவாதம் நடைபெற்று வாக்கெடுப்பு நடத்தப்படும். இந்தநிலையில் காங்கிரஸ் கருப்பு அறிக்கை வெளியிடுவதாக தெரிவித்த நிலையில் புதுடெல்லியில், பாஜகவின் 10 ஆண்டுகால ஆட்சியில் இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் ஆகியோருக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பான ‘கருப்பு அறிக்கையை’ காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டார்.

அதனை தொடர்ந்து அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

நாட்டில் ஜனநாயகத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. தற்போது நிலவும் வேலையில்லா திண்டாட்டம் குறித்து பேச பா.ஜ.க. அரசு முன்வரவில்லை. பல மாநிலங்களில் காங். கட்சியின் ஆட்சியை கவிழ்த்துவிட்டு, கடந்த 10 ஆண்டுகளில் 411 எம்.எல்.ஏ.,க்களை பா.ஜ.க. கைப்பற்றியுள்ளது. பா.ஜ.க. அல்லாத மாநிலங்களுக்கு வரி பகிர்ந்தளிப்பதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது என்றார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.