தேசிய விருதில் மாற்றங்கள் அறிவிப்பு : பரிசுத் தொகை உயர்வு

இந்திய திரைப்படங்களுக்கு ஆண்டு தோறும் தேசிய விருதுகள் வழங்கப்படும். இதனை ஜனாதிபதி வழங்குவார். 2022ம் ஆண்டுக்கான தேசிய சினிமா விருதுகள் விரைவில் வழங்கப்பட இருக்கிறது. தேசிய விருதுகளில் பல மாற்றங்கள் கொண்டு வரப்படுகிறது. இதற்காக அமைக்கப்பட்ட குழு தற்போது தனது பரிந்துரையை மத்திய தகவல் ஒலிபரப்புத் துறைக்கு அனுப்பி உள்ளது. மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சக கூடுதல் செயலாளர் நீரஜா சேகர் தலைமையிலான அக்குழுவில், பிரபல இயக்குனர்கள் பிரியதர்ஷன், விபுல் ஷா, தணிக்கை குழு தலைவர் பிரசூன் ஜோஷி, ஒளிப்பதிவாளர் எஸ்.நல்லமுத்து உள்ளிட்டோர் இடம்பெற்றனர்.

இந்த குழு பரிந்துரைத்துள்ள முக்கியமான அம்சங்கள் வருமாறு : சிறந்த அறிமுக படத்துக்கான இந்திரா காந்தி விருது என்ற விருதில் இந்திரா காந்தி பெயர் நீக்கப்பட்டு, 'இயக்குனரின் சிறந்த அறிமுக படத்துக்கான விருது' என்று மாற்றப்பட்டுள்ளது. 'தேசிய ஒருமைப்பாட்டுக்கான நர்கீஸ் தத் விருது' என்ற விருதில் நர்கீஸ் தத் பெயர் நீக்கப்பட்டு. 'தேசிய, சமூக, சுற்றுச்சூழல் கோட்பாடுகளை வலியுறுத்தும் சிறந்த படம்' என்று விருதின் பெயர் மாற்றப்பட்டுள்ளது.

இதுவரை தயாரிப்பாளருக்கும், இயக்குனருக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்ட விருது பணம், இனிமேல் முழுமையாக இயக்குனருக்கு மட்டும் அளிக்கப்படும். திரையுலக ஆளுமைகளுக்கு வழங்கப்படும் 'தாதா சாகேப் பால்கே' விருதுக்கான பரிசுத்தொகை 10 லட்சத்தில் இருந்து 15 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதுபோல், பல்வேறு பிரிவுகளில் வழங்கப்படும் தங்கத்தாமரை விருதுக்கான பரிசுத்தொகை 3 லட்சமாகவும், வெள்ளித்தாமரை விருதுக்கான பரிசுத்தொகை 2 லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

சிறந்த அனிமேஷன் படம், சிறந்த ஸ்பெஷல் எபெக்ட்ஸ் படம் ஆகியவை 'சிறந்த ஏ.வி.ஜி.சி. படம்' என்ற ஒரே விருதாக வழங்கப்படும். சிறந்த ஒலிப்பதிவுக்கான விருது, சிறந்த ஒலி வடிவமைப்புக்கான விருதாக மாற்றப்பட்டுள்ளது. அதற்கான பரிசுத்தொகை 50 ஆயிரத்தில் இருந்து 2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

சிறந்த இசை இயக்கத்துக்கான விருது, சிறந்த பின்னணி இசை விருதாக மாற்றப்பட்டுள்ளது. சிறப்பு ஜூரி விருது நீக்கப்படுகிறது. 'சிறந்த குடும்ப படம்' என்ற விருது நீக்கப்பட்டு, 'சிறந்த திரைக்கதை' விருது அறிமுகப்படுத்தப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.