தமிழ்நாடு அணி ரஞ்சி கோப்பையில் தோல்வி அடைந்ததற்கு கேப்டன் சாய் கிஷோர் எடுத்த தவறான முடிவு என பயிற்சியாளர் சுலக்ஷன் குல்கர்னி தெரிவித்துள்ளார். போட்டி முன்பாக டாஸ் வெற்றி பெற்றால் பவுலிங் தேர்வு செய்ய வேண்டும் என முடிவு செய்திருந்த நிலையில், அவர் தன்னிச்சையாக டாஸ் வென்றவுடன் பேட்டிங்கை எடுத்துவிட்டார். மைதானத்தை அறிந்து எடுத்த இந்த முடிவை அவர் ஏன் கைவிட்டு விட்டு பேட்டிங் எடுத்தார் என எனக்கு தெரியவில்லை. அவரின் தவறான முடிவு தமிழ்நாடு அணியின் ரஞ்சி கோப்பை தோல்விக்கு காரணமாக அமைந்துவிட்டது என கூறியுள்ளார் குல்கர்னி.
ரஞ்சி கோப்பையில் டாஸ் வெற்றி பெற்ற தமிழ்நாடு கேப்டன் சாய் கிஷோர் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதன்படி பேட்டிங் இறங்கிய தமிழ்யநாடு அணி 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதன்பிறகு பேட்டிங் ஆடிய மும்பை அணியும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும் ஷர்துல் தாக்கூர் நிலைத்துநின்று விளையாடி சதமடித்து அசத்தினார். அவரின் சிறப்பான ஆட்டத்தால் மும்பை அணி 378 ரன்கள் குவித்துவிட்டது. இதன்பிறகு களமிறங்கிய தமிழ்நாடு அணி மீண்டும் 162 ரன்களுக்கு ஆட்டமிழக்க, 70 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்தது.
படுதோல்வியை சந்தித்து ரஞ்சி கோப்பையை கோட்டைவிட்டது. இதனால் தமிழ்நாடு கிரிக்கெட் அணி கடும் விமர்சனத்தை சந்தித்துக் கொண்டிருக்கும் நிலையில் தான் பயிற்சியாளர் சுலக்ஷன் குல்கர்னி விளக்கம் அளித்துள்ளார். அவர் கொடுத்திருக்கும் விளக்கத்தில், ” நான் மும்பையைச் சேர்ந்தவன். எனக்கு மைதானத்தைப் பற்றி நன்கு தெரியும் என்பதால் டாஸ் வெற்றி பெற்றால் பந்துவீசலாம் என முடிவு செய்து வைத்திருந்தோம். அணி வீரர்களிடமும் இதையே தெரிவித்திருந்தோம். ஆனால் கேப்டன் சாய் கிஷோர் டாஸ் வெற்றி பெற்றவுடன் பேட்டிங் ஆடுவதாக தன்னிச்சையாக அறிவித்துவிட்டார்.
இந்த முடிவு எங்களுக்கு பெருத்த ஏமாற்றமாக அமைந்தது. பந்துவீச்சுக்கு சாதகமான மைதானம் என தெரிந்தும் ஏன் பேட்டிங் எடுத்தார் என தெரியவில்லை. அப்போதே எங்கள் அணி தோற்றுவிட்டது என எனக்கு தெரியும். அதுதான் களத்திலும் எதிரொலித்தது. மும்பை அணிக்கு அது சொந்த மைதானம். எந்த சூழலில் இருந்தாலும் அவர்களால் மீண்டு வர முடியும். அப்படி இருக்கும்போது இப்படியான முடிவுகள் எடுத்தால், ஒட்டுமொத்த அணியை பாதிக்காமல் இருக்குமா?. முதலில் பந்துவீசியிருந்தால் நிச்சயம் தமிழ்நாடு அணிக்கான முடிவாக அப்போட்டி இருந்திருக்கும்” என்றும் பயிற்சியாளர் சுலக்ஷன் குல்கர்னி தெரிவித்துள்ளார்.
போட்டி தொடங்கிய முதல் அரைமணி நேரத்திலேயே இந்திய அணிக்காக விளையாடிக் கொண்டிருக்கும் சாய் சுதர்சன் விக்கெட்டை தமிழ்நாடு அணி பறிகொடுத்துவிட்டது. அப்படி இருக்கும்போது எப்படி சரிவில் இருந்து தமிழ்நாடு அணியால் மீள முடியும். முதல் அரைமணி நேரத்திலேயே நாங்கள் தோற்றுவிட்டோம் என்றும் சுலக்ஷன் குல்கர்னி பேட்டியளித்திருக்கிறார். கேப்டன் சாய் கிஷோர் மீது அவர் வைத்திருக்கும் குற்றச்சாட்டுகள், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.