படிக்கல் அறிமுகம்… இந்திய டெஸ்ட் வரலாற்றில் நடைபெற்ற அரிதான நிகழ்வு

தர்மசாலா,

இந்தியா – இங்கிலாந்து இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 218 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து இந்தியா தனது முதல் இன்னிங்சை தொடங்கி விளையாடி வருகிறது.

இந்த போட்டிக்கான இந்திய அணியில் ரஜத் படிதார் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக அறிமுக வீரராக தேவ்தத் படிக்கல்லுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்திய டெஸ்ட் வரலாற்றில் ஒரு அரிதான நிகழ்வு அரங்கேறியுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு;-

இந்தத் தொடரின் 2-வது போட்டியில் விராட் கோலிக்கு பதிலாக அறிமுக வீரராக ரஜத் படிதாருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து ராஜ்கோட் நகரில் நடைபெற்ற 3-வது டெஸ்ட் போட்டியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான சர்பராஸ் கானுக்கு அறிமுக வாய்ப்பு வழங்கப்பட்டது. மேலும் அதே போட்டியில் மற்றொரு வீரராக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான துருவ் ஜூரெலுக்கு அறிமுக வாய்ப்பு வழங்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து ராஞ்சி நகரில் நடைபெற்ற 4-வது போட்டியில் பும்ராவிற்கு ஓய்வு வழங்கப்பட்டதால் இளம் வேகப்பந்து வீச்சாளரான ஆகாஷ் தீப் அறிமுகமாகியிருந்தார். இப்படி நான்கு வீரர்கள் ஒரே டெஸ்ட் தொடரில் அறிமுகமாகி இருந்த வேளையில் இன்று தர்மசாலா நகரில் தொடங்கிய 5-வது டெஸ்ட் போட்டியில் தேவ்தத் படிக்கல்லுக்கு அறிமுக வாய்ப்பு வழங்கப்பட்டது. இப்படி ஒரே தொடரில் 5 வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அறிமுகமானது வரலாற்றில் இது முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.