தேர்தல் பத்திர திட்டம் கொண்டு வரப்பட்டது ஏன்? சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு பிறகு அமித்ஷா விளக்கம்

புதுடெல்லி

அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்க பயன்படுத்தப்பட்ட தேர்தல் பத்திர திட்டத்தை ரத்து செய்தும், அதுபற்றிய தகவல்களை வெளியிடவும் பாரத ஸ்டேட் வங்கிக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்து இருந்தது. எந்தெந்த கட்சிக்கு யார்-யார் தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி வழங்கினார்கள் என்பதை வெளியுலகிற்கு கொண்டு வரும் வகையில் தேர்தல் பத்திரங்களில் உள்ள பிரத்யேக வரிசை எண்களை வெளியிட வேண்டும் என்று நேற்று சுப்ரீம் கோர்ட்டு மற்றொரு அதிரடி உத்தரவை பிறப்பித்தது. இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், தேர்தல் பத்திர விவகாரத்தில் பா.ஜனதாவை காங்கிரஸ் கடுமையாக விமர்சித்து வருகிறது.

இந்த நிலையில், தேர்தல் பத்திரம் திட்டம் ரத்து தொடர்பாக அமித்ஷா கூறியதாவது:

இந்திய அரசியலில் கருப்பு பணத்தின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்காக தேர்தல் பத்திரம் திட்டம் கொண்டு வரப்பட்டது. கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக கொண்டு வரப்பட்டது. தற்போது இந்த திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பத்திரம் திட்டத்தை ரத்து செய்ததைவிட அதை மேம்படுத்திருக்கலாம் என நான் நம்புகிறேன். ஆனால், அதில் ஏதும் செய்ய முடியாது. சுப்ரீம் கோர்ட்டும் தீர்ப்பு வழங்கியுள்ளது. நான் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு மதிப்பு அளிக்கிறேன். தேர்தல் பத்திரம் மூலம் பாஜக ஆதாயம் அடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஏனென்றால், பா.ஜனதா ஆட்சியில் இருக்கிறது. ராகுல் காந்தி இது ஒரு மிகப்பெரிய மிரட்டி பணம் பறித்தல் என்று தெரிவித்துள்ளார். அவருக்கு இவ்வாறு யார் எழுதி கொடுத்தார்கள் என்று எனக்குத் தெரியவில்லை” என்றார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.