சாம்பியன் பட்டம் வென்ற பெங்களூரு மகளிர் அணி: வாழ்த்து தெரிவித்த கிறிஸ் கெயில்

புதுடெல்லி,

2-வது பெண்கள் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு டெல்லியில் அரங்கேறிய இறுதி ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும், டெல்லி கேப்பிட்டல்சும் மோதின.

‘டாஸ்’ ஜெயித்த டெல்லி கேப்டன் மெக் லானிங் முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி 18.3 ஓவர்களில் 113 ரன்னில் சுருண்டது. பெங்களூரு தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் ஸ்ரேயங்கா பட்டீல் 4 விக்கெட்டும், மோலினெக்ஸ் 3 விக்கெட்டும், ஆஷா சோபனா 2 விக்கெட்டும் சாய்த்தனர்.

இதையடுத்து 114 ரன்கள் எடுத்தால் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றலாம் என களம் இறங்கிய பெங்களூரு 19.3 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 115 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக கோப்பையை கைப்பற்றியது.

கோப்பையை வென்ற ஆர்.சி.பி மகளிர் அணிக்கு கிரிக்கெட் வீரர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பெண்கள் பிரீமியர் லீக்கில் சாம்பியன் பட்டம் வென்ற பெங்களூரு மகளிர் அணிக்கு வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயில் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது, பெண்கள் பிரீமியர் லீக்கில் ஆர்.சி.பி மகளிர் அணி சாம்பியன். அருமையான சீசனுக்கு வாழ்த்துக்கள். இறுதியாக ‘ஈ சாலா கப் நம்து’. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.