என்ஐஏ, என்டிஆர்எஃப் உள்ளிட்ட முக்கிய புலனாய்வு அமைப்புகளின் தலைவர்கள் அதிரடி மாற்றம்

புதுடெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான உள்துறை அமைச்சகம், தேசிய புலனாய்வு அமைப்பின் (என்ஐஏ) இயக்குநராக புகழ்பெற்ற ஐபிஎஸ் அதிகாரி சதானந்த் வசந்த டேட்டையும், தேசிய பேரிடர் மீட்புப் படையின் (என்டிஆர்எஃப்) இயக்குநராக ஐபிஎஸ் அதிகாரி பியூஷ் ஆனந்தையும்நியமித்துள்ளது.

முன்னதாக இந்த நியமனங்களுக்கான உள்துறை அமைச்சகத்தின் முன்மொழிவுக்கு அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதனையடுத்து இந்த நியமனங்கள் பற்றிய அறிவிப்பு இன்று (புதன்கிழமை) வெளியாகியுள்ளது.

1989 உத்தரப்பிரதேச பிரிவு ஐபிஎஸ் (IPS) அதிகாரியான பியூஷ் ஆனந்த், தேசிய பேரிடர் மீட்புப் படையின் இயக்குநராக நியமிக்கப்படுகிறார். தற்போதைய தேசிய பேரிடர் மீட்புப் படையின் இயக்குநர் (NDRF) அதுல் கர்வால் மார்ச் 31 அன்று ஓய்வு பெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், தேசிய புலனாய்வு அமைப்பின் (என்ஐஏ) தலைமை இயக்குநராக மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி சதானந்த் வசந்த் டேட்டை மத்திய அரசு நியமித்துள்ளது. சதானந்த் டேட், 26/11 தாக்குதலின் போது பயங்கரவாதிகளை எதிர்த்துப் போராடியதற்காக ஜனாதிபதியின் காவல்துறை பதக்கம் பெற்றவராவார். இவர் வணிகவியல் துறையில் முதுகலை பட்டம் பெற்ற அவர், புனே பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்.

ராஜஸ்தான் கேடரின் 1990-பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான ராஜீவ் குமார் சர்மா போலீஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியகத்தின் (BPR&D) தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டிருக்கிறார். தற்போதைய இயக்குநர் பாலாஜி ஸ்ரீவஸ்தவாவுக்கு மார்ச் இறுதியில் பதவிக்காலம் முடிவடைகிறது. அதன்பிறகு சர்மா பதவியேற்பார்.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள என்ஐஏ இயக்குநர் சதானந்த் வசந்த டேட்டும், பிபிஆர்டி தலைவர் ராஜீவ் குமாரும் ஒரே காலகட்டத்தில் ஐபிஎஸ் அதிகாரிகளாக தேர்வாகி, பயிற்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.