முகமூடி மனிதனாக பிரித்விராஜ் : ரசிகர்கள் ஏமாற்றம்

சலார் படம் வெளியானதை தொடர்ந்து அதில் வில்லனாக நடித்த பிரித்விராஜ் தொடர்ந்து மீடியாக்களின் செய்திகளில் அடிபட்டுக் கொண்டே இருக்கிறார். மலையாளத்தில் அவர் நடித்துள்ள ஆடுஜீவிதம் திரைப்படம் நாளை மார்ச் 28ம் தேதி வெளியாகிறது. ஐந்து மொழிகளில் வெளியாகும் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் ஒவ்வொரு மாநிலமாக சென்று பம்பரமாக சுற்றி புரமோஷன் செய்து வருகிறார் பிரித்விராஜ்.

இந்த நிலையில் அக்ஷய் குமார் மற்றும் டைகர் ஷெராப் இருவரும் இணைந்து நடித்துள்ள 'படே மியான் சோட்டே மியான்' படத்தில் வில்லனாக நடித்துள்ளார் பிரித்விராஜ். இந்த படம் வரும் ஏப்ரல் பத்தாம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியானது. மூன்று நிமிடங்களுக்கு மேல் ஓடக்கூடிய இந்த டிரைலர் ராணுவ பின்னணியில் கதை நடப்பதை ஆக்ஷன் காட்சிகளுடன் தெளிவுப்படுத்துகிறது. மேலும் அக்ஷய் குமார், டைகர் ஷெராப் ஆகியோரின் ஆக்ஷன் காட்சிகள் பிரதானமாக இடம்பெற்றுள்ள இந்த டிரைலரில் பிரித்விராஜ் வரும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.

ஆனால் அவர் வரும் காட்சிகளில் எல்லாம் வித்தியாசமான ஒரு முகமூடி அணிந்தபடி தான் வருகிறார். படத்தில் இவர் கொடூர வில்லனாக நடித்துள்ளார் என்று சொல்லப்படுகிறது. அதேசமயம் படத்தில் அவர் வரும் காட்சிகளில் எல்லாம் இப்படி மாஸ்க் அணிந்து நடித்தால், அவரது முகத்தை, நடிப்பை எப்படி பார்க்க முடியும் ? படம் முழுவதும் இவர் இப்படித்தான் நடித்துள்ளாரா, இல்லை சில காட்சிகளில் மட்டுமா என்று தெரியாததால் பிரித்விராஜின் ரசிகர்கள் இது குறித்து தங்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.