சென்னையில் பிரதமர் மோடி ‘ரோடு ஷோ’ – வரவேற்பு எப்படி?

சென்னை: சென்னை தி.நகரில் நடந்த ரோடு ஷோ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். பிரதமர் மோடி தாமரை சின்னத்தை பொதுமக்களிடம் காட்டியபடி பேரணியாக சென்று, பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவு கோரினார்.

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு கோரி நடைபெறும் பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இரண்டு நாள் சுற்றுப் பயணமாக தமிழகம் வந்துள்ளார். சென்னை விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடியை பாஜக நிர்வாகிகள் வரவேற்றனர். விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக தி.நகரில் நடைபெறும் ரோடு ஷோ நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்றார்.

தென் சென்னை தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜனை ஆதரித்து தியாகராய நகர் பனகல் பூங்கா முதல் தேனாம்பேட்டை சிக்னல் வரையிலான பாண்டி பஜார் சாலையில் சுமார் 2 கி.மீ. தூரத்துக்கு ‘ரோடு ஷோ’ மூலம் பிரச்சாரம் மேற்கொண்டார். வழியின் இருபுறங்களிலும் ஏராளமான பாஜக தொண்டர்கள், பிரதமர் மோடிக்கு மலர்களைத் தூவி வாழ்த்தி வரவேற்றனர்.

பிரதமர் பேரணி வந்த வாகனத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராஜன், மத்திய சென்னை பாஜக வேட்பாளர் வினோஜ் பி.செல்வம், வட சென்னை பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

பிரதமரின் ‘ரோடு ஷோ’ நிகழ்ச்சியையொட்டி 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 3,500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு, கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.