`என் தாடையை இழுத்ததால நீளமாகிடுச்சு…' அபிராமி சொன்ன கருத்து குறித்து மருத்துவர்கள் சொல்வதென்ன?

நடிகை அபிராமி, தான் உருவ கேலிக்குள்ளானது குறித்தும் அது எதனால் ஏற்பட்டது எனவும் கூறியதுதான் ‘என்னடா இது புதுசா இருக்கு?’ என திரைத்துறை வட்டாரத்தில் மட்டுமல்ல, மருத்துவ உலகத்தையும் ஆச்சர்யப்படுத்தியிருக்கிறது.

திரைத்துறையில் உடல் ரீதியான விமர்சனங்களை எதிர்கொண்டதாகவும் உயரத்தை வைத்து கேலி செய்ததாகவும் கூறிய நடிகை அபிராமி, தனது தாடை எதனால் இப்படி ஆனது தெரியுமா எனக் கூறியவர், “என்னோட கன்னத்தின் தாடை நீளமா இருக்குன்னு கிண்டல் பண்ணியிருக்காங்க. சின்ன வயசுல கொஞ்சுறேங்குற பேர்ல என் தாடையைப் பிடிச்சு இழுத்து இழுத்துப் பார்த்திருக்காங்க. என் தாடை நீளமா ஆகுறதுக்கு அதுவும் காரணமா இருக்கலாம்” எனச் சொன்னதுதான் ஆச்சர்யத்துக்குக் காரணம். நாளையே ஒரு குழந்தையின் கன்னத்தைப் பிடித்துக் கொஞ்சினால் பெற்றோர்கள் அச்சப்படவும் வாய்ப்பு இருக்கிறது என்கிற நோக்கத்தில், குழந்தையின் தாடையைப் பிடித்து இழுத்தால் இப்படியெல்லாம் ஆகுமா என மருத்துவர்களிடம் பேசினோம். இதுகுறித்து குழந்தைகள் நல மருத்துவர் அருண்குமாரிடம் பேசியபோது,

நடிகை அபிராமி

“தாடையைப் பிடித்து இழுத்தால் வளரும் என்பது தவறான நம்பிக்கை. அப்படிச் செய்தால் தாடை வளராது” என்று ஒரே வரியில் முடித்துக்கொண்டவரைத் தொடர்ந்து, அரசு மருத்துவர்கள் சங்க மாநிலத் தலைவர் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத் தலைவர் டாக்டர் சாமிநாதனிடம் பேசினோம்,

“நம்ம சமூகத்தில் குழந்தை வளர்ப்புல தவறான மூடநம்பிக்கைள் நிலவுது. குழந்தையை கொதிக்க கொதிக்க உள்ள சுடுநீரில் குளிப்பாட்டுவாங்க. அதேமாதிரி, கவிழ்த்துப் போட்டும் குளிப்பாட்டுவாங்க. குறிப்பா, தஞ்சாவூர் பக்கம்லாம் மூக்குல எண்ணெய் எல்லாம் ஊத்துவாங்க. இன்னும் சில இடத்துல, குழந்தைக்கு எண்ணெய் தேச்சும் குளிப்பாட்டுவாங்க. இதெல்லாம் குழந்தை வளர்ப்புல கண்டிப்பாக செய்யக்கூடாதவை; தவிர்க்கவேண்டியவை. குழந்தையை வெதுவெதுப்பான நீரில் குளிப்பாட்டலாம். எண்ணெய் வெச்சு குளிப்பாட்டும்போதோ, கவிழ்த்துப்போட்டுக் குளிப்பாட்டும்போதோ, மூக்கில் எண்ணெய் ஊற்றுவதாலோ குழந்தைக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு லிப்பிட் நிமோனியா (Lipoid pneumonia) வந்துவிடும். அதனால், இந்தத் தவறான பழக்கவழக்கங்களையெல்லாம் விட்டொழிக்கவேண்டும்.

டாக்டர் சாமிநாதன்

அதேபோல, குழந்தையைக் குளிப்பாட்டும்போது காதுல மூணு விரலை வெச்சு அழுத்தி தாடைவரைக்கும் இழுப்பாங்க. அப்படிப் பண்ணினா தாடை வளரும்ங்கிற மூடநம்பிக்கை நம்ம மக்கள்கிட்டே இருக்கு. இதனால, தாடையெல்லாம் வளராது. காதுக்குள்ள இருக்கும் சவ்வில் பாதிப்பு ஏற்பட்டு சீழ்பிடிக்கத்தான் வாய்ப்புண்டு. தாடை நீட்டா இருக்கக் காரணம், ஜெனிட்டிக்கா வர்றது. நம்ம குடும்பத்துல நம்ம அப்பாவுக்கோ, தாத்தாவுக்கோ அப்படி இருந்தா, நமக்கும் அப்படித்தானே வரும்? அதேமாதிரி, குழந்தையோட மூக்கைக் கூராக்குறேன்னு இழுத்துவிடுவாங்க. இதனாலும், குழந்தைக்கு மூக்குல பாதிப்பு ஏற்படுறதுக்கான வாய்ப்பு அதிகம்.

சீனாவுல பொதுவாவே, மூக்கு சப்பையா இருக்கே, அவங்களோட மூக்கை இழுத்துவிட்டு நீட்டாக்கிட முடியுமா? எல்லாம் ஜெனிட்டிக்தான் காரணம்” என்று எச்சரிக்கையூட்டுகிறவர், கர்ப்பிணிப் பெண்கள் குங்குமப்பூவைப் பாலில் போட்டுக் குடிப்பது குறித்தும் விழிப்புணர்வூட்டுகிறார். “குழந்தை சிவப்பா பிறக்க குங்குமப்பூவை பால்ல போட்டுக் குடிப்பாங்க. அதெல்லாம் உண்மை கிடையாது. காஷ்மீரிகள் சிவப்பா இருக்காங்க. அந்த ஊரு குங்குமப்பூவை சாப்ட்டா சிகப்பாகிடுவாங்கங்குற மூடநம்பிக்கைதான்” என்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.