பூமி மீது இந்த நாளில் குறுங்கோள் மோதும்… ஆய்வில் அதிர்ச்சி தகவல்

வாஷிங்டன்,

அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம், பூமி மீது மோத கூடிய குறுங்கோள் பற்றிய ஆய்வை கடந்த ஏப்ரலில் மேற்கொண்டது. இந்த ஆய்வு முடிவை கடந்த 20-ந்தேதி வெளியிட்டது.

அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் லாரெல் நகரில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் இயற்பியல் ஆய்வகத்தில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு முடிவில், சக்தி வாய்ந்த குறுங்கோள் ஒன்று பூமியை 72 சதவீதம் தாக்க கூடிய சாத்தியக்கூறு உள்ளது என்ற அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவின் பல்வேறு அரசு அமைப்புகள் மற்றும் சர்வதேச குழுவினர் என 100 பிரதிநிதிகள் வரை இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டனர். இந்த பெரிய குறுங்கோள் மோதல் ஆனது இயற்கை பேரிடரில் ஒன்றாக இருக்கிறது. எனினும், தொழில்நுட்ப உதவியுடன், மனித குலம் அதனை முன்பே கணிக்க கூடிய ஒன்றாகவும் உள்ளது.

இதுதவிர, இதனை பல ஆண்டுகளுக்கு முன்பே கண்டறிந்து, அதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என வாஷிங்டனில் செயல்பட்டு வரும் நாசா தலைமையகத்தின் கோள்கள் பாதுகாப்பு அதிகாரியான லிண்ட்லே ஜான்சன் கூறியுள்ளார்.

இதன்படி, வருகிற 2038-ம் ஆண்டு ஜூலை 12-ந்தேதி (14.25 ஆண்டுகள் எச்சரிக்கை காலம்) பூமி மீது குறுங்கோள் மோதுவதற்கான வாய்ப்பு 72 சதவீதம் என்ற அளவில் உள்ளது.

எனினும், இந்த முதல்கட்ட ஆய்வில் குறுங்கோளின் அளவு, அதில் கலந்துள்ள பொருட்கள் மற்றும் நீண்டகால இயங்கு பாதை உள்ளிட்ட விவரங்களை சரியாக தீர்மானிக்க முடியவில்லை என்று நாசா தெரிவித்து உள்ளது. இந்த குறுங்கோள் மோதலை தடுக்க போதிய அளவில் நாம் தயாராக இல்லை என்றும் நாசா தெரிவித்து உள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.