புதுடெல்லி: மாநிலங்களவையின் அவை முன்னவராக இருந்த பியூஷ் கோயலுக்குப் பதில் அந்தப் பொறுப்புக்கு ஜெ.பி.நட்டா நியமிக்கப்பட்டுள்ளார்.
இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்தவரான ஜெ.பி. நட்டா, கடந்த பிப்ரவரி மாதம் மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதன் தொடர்ச்சியாக, நரேந்திர மோடியின் 3.0 அரசில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக அவர் பதவியேற்றார். இந்நிலையில், மாநிலங்களவையின் அவை முன்னவராக இருந்த பியூஷ் கோயலுக்குப் பதில் அந்த பதவிக்கு ஜெ.பி. நட்டா நியமிக்கப்பட்டுள்ளார்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் வடக்கு மும்பை தொகுதியில் போட்டியிட்ட பியூஷ் கோயல், அதில் வெற்றி பெற்று மக்களவை உறுப்பினராக இன்று (திங்கள்கிழமை) பதவியேற்ற நிலையில், அவர் வகித்த பதவி நட்டாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மாநிலங்களவையின் அவை முன்னவராக நியமிக்கப்பட்டுள்ள ஜெ.பி.நட்டாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ், “மாநிலங்களவையின் அவை முன்னவராக நியமிக்கப்பட்டுள்ள ஜெ.பி.நட்டாவுக்கு வாழ்த்துகள். வெங்கையா நாயுடு சொன்னது போல், அவை முன்னவர் இடமளித்தால், எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்கலாம்” என தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.