மகளிர் ஆசிய கோப்பை தொடரில் இருந்து விலகிய இந்திய வீராங்கனை – காரணம் என்ன?

புதுடெல்லி,

மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் கடந்த 19ம் தேதி தொடங்கியது. இதில் இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 108 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து ஆடிய இந்திய அணி 14.1 ஓவரில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 109 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்திய அணி தனது அடுத்த லீக் ஆட்டத்தில் இன்று மதியம் 2 மணிக்கு யு.ஏ.இ அணியை சந்திக்கிறது. இந்நிலையில் இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனையான ஸ்ரேயங்கா பாட்டீல் எஞ்சிய ஆசிய கோப்பை தொடரில் இருந்து விலகுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தின் போது இடது கை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் எஞ்சிய ஆசிய கோப்பை தொடரில் இருந்து விலகி உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக தனுஜா கன்வர் மாற்று வீராங்கனையாக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.