கவுதம் கம்பீர் நிறைய ஆலோசனைகள் வழங்கினார் – வாஷிங்டன் சுந்தர் பேட்டி

கொழும்பு,

இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.

இதையடுத்து நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் 2 ஆட்டங்களின் முடிவில் 1-0 என இலங்கை முன்னிலையில் உள்ளது. முதல் ஒருநாள் போட்டி டை ஆனது. 2வது ஒருநாள் போட்டியில் இலங்கை வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 3வது ஒருநாள் போட்டி நாளை நடைபெறுகிறது.

தொடரை இழக்காமல் இருக்க நாளை நடைபெறும் ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் இந்தியா ஆட உள்ளது. இதையடுத்து இந்த போட்டி குறித்து இந்திய ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

இது போன்ற சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான சூழ்நிலைகளில் தரமான பந்துவீச்சு தாக்குதலுக்கு எதிராக வெற்றி பெறுவதற்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும். இந்த போட்டியில் வெற்றி பெற்றால் (நாளைய ஆட்டம்) அது அடுத்து வரும் பெரிய தொடர்களுக்கு எங்களுக்கு பெரிய நம்பிக்கையை கொடுக்கும்.

இது போன்ற சூழ்நிலைகளில் சுழற்பந்து வீச்சுக்கு எதிராக எவ்வாறு பேட்டிங் செய்வது என்பது குறித்து நிறைய ஆலோசனைகளை கவுதம் கம்பீர் வழங்கினார். சுழற்பந்துக்கு எதிராக அவர் ஒரு சிறந்த பேட்ஸ்மேன். எங்கள் அணுகுமுறையில் சிறிய மாற்றம் இருக்கும். எனவே அடுத்து வரும் போட்டியில் மிகுந்த நம்பிக்கையுடன் எதிர் கொண்டு விளையாடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.